மயிலாடுதுறை மாவட்டம், சின்னக்கடை வீதியில் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கி.காசிராமனை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, “எல்லோரும் கல் மாவில் கோலமிட்டபோது, அரிசி மாவில் கோலமிட்டு எறும்பு போன்ற சிற்றுயிர்களுக்கு உணவளித்தவன் தமிழன். வீட்டு வாசலில் நாயைக் கட்டி வைத்தவர்களுக்கு மத்தியில் வாசலில் திண்ணையைக் கட்டி வைத்தவன் தமிழன். இந்தத் தேர்தல் பலருக்கும் தேர்தல் களம். நாம் தமிழருக்கு போர்க்களம். அரை நூற்றாண்டாக நடைபெற்ற தீய ஆட்சியை விலக்கி தூய ஆட்சியை மலரச் செய்ய, பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்ய நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் விற்பனைக்கு இல்லை எனும் சட்டத்தை முதல் நாளிலேயே நிறைவேற்றுவோம். அரசியல் பேரியக்கத்தில் சுற்றுச்சூழலுக்கு என்று தனியாக பாசறையைத் தொடங்கிய கட்சி நாம் தமிழர் கட்சி. தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு திமுக சுற்றுச்சூழல் பாசறையைத் தொடங்கியுள்ளது. நாங்கள் சுற்றுச்சூழல் பாசறையைத் தொடங்கியதே, சுற்றுச்சூழலை திமுகவினரிடம் இருந்து பாதுகாக்கதான். ஆட்சிக்கு வரும் முன்னரே தூய குடிநீர் மக்களுக்கு முறையாக வழங்கி சாதித்துக் காட்டியவர் வேட்பாளர் கி.காசிராமன்.
மக்கள் நீங்கள் ஒவ்வொருவரும் ’விவசாயி’ சின்னத்திற்கு ஒரு வாக்கினை மட்டும் அளியுங்கள். நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆட்சிக்கு வந்தவுடன் படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை. படிக்காதவர்களே இல்லை என்பதை ஏற்படுத்துவதே அடுத்த வேலை. உலக அளவில் கல்வியில் முதல் இடத்தில் உள்ள தென்கொரியாவுடன் போட்டியிடும் அளவுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை உலக தரத்தில் இலவசக் கல்வி வழங்கப்படும். ஆட்சி அமைந்தவுடன் பெண்கள், குழந்தைகள், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.