நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், பகவான் என்ற தனியார் பேருந்து வேதாரண்யத்திலிருந்து திருவாரூர் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது, தலைஞாயிறு அடுத்துள்ள ஆலங்குடி அருகே வந்த தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் பயங்கர சப்தத்துடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மக்கள் அலறும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் காயமுற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த பயணிகளை மீட்டு 108 வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.