மதுரை ஜீவா நகர் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் தெருவில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் (25). இவரது மனைவி உமாதேவி (20). இந்த இளம் தம்பதி ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த உமாதேவி நேற்றிரவு (ஏப்ரல் 13) பாலகிருஷ்ணன் தூங்கிய பின் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பாலகிருஷ்ணன் கண் விழித்து பார்க்கையில் உமாதேவி இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் வேதனையடைந்த பாலகிருஷ்ணன் உளியால் தனது கழுத்தில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது வலியால் பாலகிருஷ்ணன் அலறவே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜெய்ஹிந்துபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உமாதேவியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணும் உமா தேவியும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், உமாதேவிக்கு 16 வயதாக இருந்த நிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக்கு சென்றார். பின் உமாதேவிக்கு 18 வயது நிரம்பியதும் இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி மீண்டும் திருமணம் செய்துள்ளனர்.
திருமணத்திற்கு பின் மதுரை வந்து குடியேறியுள்ளனர். மதுரையில் பாலகிருஷ்ணன் கார்பெண்டராகவும், உமாதேவி பேன்சி ஸ்டோரிலும் பணியாற்றி வந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில தினங்களாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது இதனால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.