மதுரையில் தீவிரமாக நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் கரோனோ பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், அதன் காரணமாக நோய்த் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் செய்தி வெளியானது. மதுரையில் கரோனா தொற்றுநோய் பரவல் குறித்து வந்த ஊடக செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து இதனை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அந்த வழக்கில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் சரவணனும் ஒரு மனுதாரராக இணைந்துள்ளார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 4) மதுரை கிளை நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயனன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான வழக்குரைஞர், "மதுரையில் கரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் தினம்தோறும் 1,400 பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய அளவில் கரோனா கண்டறியும் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.