தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 10, 2020, 11:56 PM IST

ETV Bharat / state

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடியும்? - மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப்பணிகள் எப்போது முடிவடையும் என்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai
madurai

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றுவருவதால், அங்கு காலி செய்யப்பட்ட பெட்டிக்கடைகளின் உரிமையாளர்களில் சிலர் தற்காலிகமாக எல்லீஸ் நகர் பேருந்துநிலையம் முன்பு கடைகளை அமைத்துள்ளனர். அதனால் ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை எல்லீஸ் நகர் பேருந்து நிலையம் முன்பு நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளால் இடையூறு ஏற்படுவதால் அவற்றை அகற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு கடந்தாண்டு பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது, எல்லீஸ் நகர் பேருந்து நிலையம் முன்பு கடைகளை அமைப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே அந்தத் தடையை நீக்கக்கோரி மதுரை பெரியார் பேருந்து நிலைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் தலைவர் ஆர்.வி. ராஜாராம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாற்றிடத்தில்தான் கடை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முறையாக வாடகை செலுத்திவருகிறோம். மேலும் இக்கடைகளால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இம்மனு இன்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிவடைய எவ்வளவு நாளாகும்? என மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மாநகராட்சி சார்பில் கட்டுமானப் பணிகள் 50 விழுக்காடு மட்டுமே முடிவடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் எப்போது முடிவடையும் என்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க : விளை நிலங்களை வீட்டு மனையாக மாற்றிய வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details