திருநெல்வேலியைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனுவை தாக்கல் செய்தார்.
அதில், "சென்னையில் தவறான வார்த்தைகளில் கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டு யூடியூப் சேனலில் பதிவிட்டதாக மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது யூடியூப் சேனல் தடைசெய்யப்பட்டது. இருந்தபோதும் அவர்களது வீடியோக்கள் பல விதமான சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு உள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் பலர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 2012ஆவது சர்வேயின்படி இணையதளம் மூலம் மிரட்டுவதில் (கொடுமைப்படுத்துதல்) இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
கரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் அதிகப்படியாக செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழந்தைகள் அதிகப்படியாக சமூகவலைதளங்கள் உபயோகிக்க வாய்ப்பு உள்ளது. சமூக வலைதளங்களில் ஆபாசம் நிறைந்த படங்கள் வார்த்தைகள் அதிகப்படியாக வருவதால் குழந்தைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
யூடியூப், பேஸ் புக், வெப் சீரியஸ், செல்ப் கண்டெண்ட் வீடியோ, ஷார்ட் பிலிம்ஸ், பிரான்க் சோ ஆகியவை தணிக்கை செய்யப்படுவதில்லை. யூடியூப், பேஸ்புக், சில சமூகவலைதளங்கள் நேரலை செய்யக்கூடிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. சில அங்கீகரிக்கப்பட்ட செய்தி சேனல்களை தவிர மற்றவர்கள் உண்மைக்குப் புறம்பான விஷயங்களை நேரலை என்று கொடுத்து வருகின்றனர்.