இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரையில் ஆதரவு தேவைப்படும் விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மதிய உணவு வழங்கும் வகையில், மூவாயிரம் பேருக்கு உணவு வழங்கி, மே ஒன்றாம் தேதி இந்த அன்னவாசல் திட்டம் தொடக்கப்பட்டது.
இன்றைய நிலையில் நாள்தோறும் நான்காயிரத்து 500 பேருக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்கப்பட்டுவருகிறது. 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உணர்வுப்பூர்வமாக இப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வரும் நடிகர் சூர்யா, இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார்.