தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. 71 அடி நீர்த்தேக்க கொள்ளளவு கொண்ட இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் நீராதாரகமாகத் திகழ்கிறது.
முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீர், வருசநாடு அருகே உள்ள மூல வைகை ஆகியவற்றிலிருந்து வரும் தண்ணீர் ஆகியவை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளாகும். மேலும் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தையடுத்து அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 65அடி வரை எட்டியது.
இதனைத்தொடர்ந்து வைகை பூர்வீக பாசனப் பகுதி விவசாயிகள் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இதனால், வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.