தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 31, 2019, 3:20 PM IST

ETV Bharat / state

மதுரை பேரையூர் அருகே தீண்டாமை தடுப்புச் சுவரா? - கொதிக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி!

மதுரை: பேரையூர் அருகே பி சுப்புலாபுரம் என்ற கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக தடுப்புச் சுவர் ஒன்று எழுப்பப்பட்டுள்ளதாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

untouchability-wall

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது பி சுப்புலாபுரம் ஊராட்சி. அண்மையில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை அங்குள்ள சுடுகாட்டில் எரிப்பதற்கு ஆதிக்க சாதியினர் அனுமதி தர மறுத்ததால், கொட்டும் மழையில் தார்ப்பாய் பிடித்த வண்ணம் அந்த சடலத்தை வேறு இடத்தில் வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது அதே கிராமத்தில் தீண்டாமைச்சுவர் என்ற புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆதிக்க சாதியினரின் பட்டா நிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தடுப்புச் சுவர், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் பட்டியலின மக்கள் இந்த சுவரைத்தாண்டி உள்ளே வரக்கூடாது என்ற ஆதிக்க சாதியினரின் நோக்கம் தான் என்று அங்குள்ள ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பேரையூர் அருகே கட்டப்பட்டுள்ள தீண்டாமை தடுப்புச்சுவர்

இந்த நிலையில் மதுரை மகபூப்பாளையம் அருகே உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் செல்லக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து சமுதாய மக்களும் கலந்து வாழும் ஒரே கிராமத்தில் இரண்டு வெவ்வேறு சுடுகாடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பட்டியலின மக்களுக்காக அமைக்கப்பட்ட சுடுகாட்டில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், ஆதிக்க சாதியினரின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட மயானத்தில் தகனமேடை மற்றும் மேற்கூரை உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தீண்டாமை தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தல்

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி இறந்த சண்முகவேல் என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த நபரின் சடலத்தை பெருமழை காரணமாக எரியூட்ட முடியவில்லை என்று கூறி மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான தகன மேடையில் எரியூட்ட அனுமதி கோரப்பட்டதாகவும் கூறினார். இதற்கு அவர்கள் அனுமதிக்காத நிலையில், வெட்டவெளியில் தார்ப்பாயின் கீழே சடலத்தை வைத்து எரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.

இந்த நிலையில், அதே ஊருக்குள் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கும் ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதிக்கும் இடையே தடுப்புச்சுவர் ஒன்று கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு எழுப்பப்பட்டுள்ளது என்று கூறிய செல்லக்கண்ணு, பட்டியலின மக்களின் புழக்கத்தை தடுப்பதற்காகவே இந்த சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

தமிழ்நாடு அரசும், மதுரை மாவட்ட ஆட்சியரும் உடனடியாக தலையிட்டு இந்த சுவரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாகரீக காலத்தில் சக மனிதர்களை இதுபோன்று சுவர் எழுப்பி தடுத்து ஆதிக்கம் செய்வதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இது பற்றி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் அளிக்க இருப்பதாக கூறிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள், தேவைப்பட்டால் உயர் நீதிமன்றத்தையும் நாடுவோம் என்றனர்.

பேரையூர் அருகே கட்டப்பட்டுள்ள தீண்டாமை தடுப்புச்சுவர்

இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புற நகர் செயலாளர் ராம கிருஷ்ணன், டி. கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் சமயன், மதுரை மாநகர செயலாளர் விஜயராஜன் மற்றும் சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உடன் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details