மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது பி சுப்புலாபுரம் ஊராட்சி. அண்மையில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை அங்குள்ள சுடுகாட்டில் எரிப்பதற்கு ஆதிக்க சாதியினர் அனுமதி தர மறுத்ததால், கொட்டும் மழையில் தார்ப்பாய் பிடித்த வண்ணம் அந்த சடலத்தை வேறு இடத்தில் வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது அதே கிராமத்தில் தீண்டாமைச்சுவர் என்ற புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆதிக்க சாதியினரின் பட்டா நிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தடுப்புச் சுவர், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் பட்டியலின மக்கள் இந்த சுவரைத்தாண்டி உள்ளே வரக்கூடாது என்ற ஆதிக்க சாதியினரின் நோக்கம் தான் என்று அங்குள்ள ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மகபூப்பாளையம் அருகே உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் செல்லக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து சமுதாய மக்களும் கலந்து வாழும் ஒரே கிராமத்தில் இரண்டு வெவ்வேறு சுடுகாடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பட்டியலின மக்களுக்காக அமைக்கப்பட்ட சுடுகாட்டில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், ஆதிக்க சாதியினரின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட மயானத்தில் தகனமேடை மற்றும் மேற்கூரை உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி இறந்த சண்முகவேல் என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த நபரின் சடலத்தை பெருமழை காரணமாக எரியூட்ட முடியவில்லை என்று கூறி மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான தகன மேடையில் எரியூட்ட அனுமதி கோரப்பட்டதாகவும் கூறினார். இதற்கு அவர்கள் அனுமதிக்காத நிலையில், வெட்டவெளியில் தார்ப்பாயின் கீழே சடலத்தை வைத்து எரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.