ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வளர்பிறை நாள்களில் நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்தாண்டு பங்குனி உத்திரத் திருவிழா வரும் மார்ச் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதிவரை நடைபெறுவதாகக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
விழாவில் முக்கிய நிகழ்வாக வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவம் அதனைத்தொடர்ந்து 10ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதால் நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பெரிய நிறுவனங்கள் அனைத்தையும் மூடுவதற்கு மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாகத் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு எட்டு கால பூஜை மட்டும் நடைபெற்றது.