தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் எந்த மோதலும் கிடையாது - மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ - மதுரை மாவட்ட செய்தி

ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது போல் மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே எந்த மோதலும் கிடையாது. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் தவிர்க்க இயலாதவை. ஆனால் அதை மோதலாகக் கருதக்கூடாது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 25, 2023, 10:24 PM IST

Updated : Mar 25, 2023, 10:46 PM IST

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மயிலாடுதுறை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதி டி.ராஜா ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், மோதல் இருப்பதாகக் கருதுவது பொருளற்றது. உலக நாடுகளிடம் இந்தியா குறித்த தவறான பார்வையை இது போன்ற சித்தரிப்புகள் ஏற்படுத்தும்.

இந்திய நீதித்துறை சுதந்திரமாக இயங்குவதற்கு மத்திய அரசின் ஆதரவு எப்போதும் உண்டு. இங்கு யாரும் சர்வாதிகாரம் செய்துவிட முடியாது. ஒரு துறைக்கும் மற்றொரு துறைக்கும் உள்ள கருத்து வேறுபாட்டை ஜனநாயக நெருக்கடியாக கருதக்கூடாது. ஒருவரை ஒருவர் விமர்சிக்கலாம். ஆனால் தேசநலன் என்று வரும்போது அனைவரும் ஒன்றாகவே சிந்திக்க வேண்டும். இந்திய சட்ட அமைச்சகம் ஒரு பொதுவான அடிப்படை சொற்களஞ்சியத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் உட்பட 22 மாநில மொழிகளில் தொழில்நுட்ப வசதியுடன் மொழி பெயர்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ற தொழில்நுட்பம் வாயிலாக மொழி பெயர்த்தாலும் மீண்டும் அதனை சரிபார்க்க வேண்டியதாக உள்ளது.

மதுரை வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம். பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நீதித்துறையும், தமிழ்நாடு அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவதே தமிழ்நாட்டில் நீதித்துறைக்கான மேம்பாட்டிற்கான முக்கிய காரணமாக உள்ளது. நீதித்துறைக்காக ஒதுக்கப்படும் நிதி பல மாநிலங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இதற்கு யாரையும் குறை சொல்வதற்கில்லை. பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்கு நீதி வழங்குவதில் தமிழக நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட்டன.

அண்மையில் நான் புதுச்சேரி மாநிலத்துக்கு சென்றபோது, நீதித்துறையும், அரசும் இணைந்து பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீர்க்க முயற்சித்தால் மட்டுமே நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் சாத்தியமாகும் என்பதை உணர்ந்தேன். கடந்த ஆண்டு அரசு மாவட்ட மற்றும் பிற நீதிமன்றங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு மத்திய சட்ட அமைச்சகம் கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறது.

நீதிமன்றங்களில் போதுமான கழிப்பறை வசதிகள், குறிப்பாக பெண்களுக்கான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதனால் எந்தவித சிக்கலுமின்றி அவர்கள் பணியாற்றும் சூழல் உருவாகும். இந்திய நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

அதற்குப் பல காரணங்கள் உள்ளன. எளிய குடும்பங்களிலிருந்து வரும் மக்களின் வழக்குகள் 10 ஆண்டுகள் நிலுவையில் உள்ளன. இதற்கு நீதிபதிகளை குறை சொல்ல முடியாது. சராசரியாக ஒரு நீதிபதி நாளன்றுக்கு 50லிருந்து 60 வழக்குகளைக் கையாள்வதால் நீதிபதிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

இதுபோன்ற சவால்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்க்க குழுவாக செயல்பட வேண்டும். அதற்கான விமர்சனங்களுக்கும் அவர்களே பலியாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனாலும் வழக்குகளை விரைந்து முடிப்பதிலும் அவர்கள் சளைத்தவர்களல்ல. இதற்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுதான் ஒரே வழி. தற்போது இந்தியா முழுவதும் 4.9 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 10 கோடியை நெருங்கும் என்று மூத்த நீதிபதிகள் குறிப்பிடுகின்றனர். எதிர்காலத்தில் இந்திய நீதித்துறை முற்றிலும் காகிதமற்றதாக மாற வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது' என்றார்.

இதையும் படிங்க: உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும்.. உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் ஸ்டாலின் வேண்டுகோள்..

Last Updated : Mar 25, 2023, 10:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details