சட்டவிரோதமான குவாரிகள் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு - thamirabarani river
கடந்த 2012ஆம் ஆண்டு உயர் நீதிமன்றக் கிளையில் குவாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு, அப்போதைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் குவாரிகள் அமைக்கப்பட்டு சட்டவிரோதமாக மண் அள்ளுவது தொடர்ந்து வருகிறது.
![சட்டவிரோதமான குவாரிகள் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு thamirabarani river](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10824022-896-10824022-1614590626517.jpg)
மதுரை: தாமிரபரணி ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக குவாரிகளுக்கு மணல் அள்ளுவதை தடுக்க கோரிய மனுவில், சுரங்கத்துறை இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார் தோப்பை சேர்ந்த ஞானேஸ்வரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், எங்கள் ஊராகிய ஆழ்வார் தோப்பு, தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது . எங்கள் ஊரில் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகிறோம். எங்கள் ஊர் பாரம்பரியமிக்க ஊராகும். எங்கள் ஊர் பகுதியில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன.
இந்த பகுதியில் சிலர் சட்டவிரோதமாக குவாரி அமைத்துள்ளனர். இதற்காக பல இடங்களில் பள்ளம் தோண்டி மணல் போன்ற தாதுப் பொருட்களை எடுத்தும் வருகின்றனர். இதனால், பல இடங்களில் 20 அடிக்கும் கீழே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மழை வெள்ள காலங்களில் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் எங்கள் ஊர் பகுதியில் புகுந்து ஊரை நாசம் செய்யும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு உயர் நீதிமன்றக் கிளையில் குவாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு, அப்போதைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் குவாரிகள் அமைக்கப்பட்டு சட்டவிரோதமாக மண் அள்ளுவது தொடர்ந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நீதிமன்றம் சட்டவிரோதமாக மண் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து சுரங்கத்துறை இயக்குனர், மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் மார்ச் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.