தமிழ்நாடு

tamil nadu

தென்காசி காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

By

Published : Feb 7, 2023, 10:15 PM IST

தென்காசி இளைஞனை காதல் திருமணம் செய்த குஜராத் இளம்பெண்னை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்திச் சென்ற விவகாரம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் இளம்பெண்ணை 2 நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் வாங்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tenkasi love married girl kidnapped case adjourned in madurai high court
தென்காசி காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்; பெற்றோர் முன்ஜாமீன் கோரி மனு

மதுரை: தென்காசி மாவட்டம், இலஞ்சி கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர், வினித். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட கிருத்திகாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இந்த திருமணத்தில் கிருத்திகாவின் பெற்றோருக்கு உடன்பாடு இல்லை. இதையடுத்து வினித்திடம் இருந்து பிரித்து கிருத்திகாவை அவரது பெற்றோர் கடத்திச் செல்வது போன்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் கடந்த வாரம் பெண்ணின் பெற்றோர், மாப்பிள்ளை வினித் மற்றும் உறவினர்களை தாக்கி இளம் பெண்ணை கடத்திச் சென்றனர்.

இந்த வழக்கில் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் எட்டு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர். தனிப்படைகள் அமைத்தும் கிருத்திகாவை தேடிவந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், குஜராத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து கிருத்திகாவுக்கும், அவரது உறவினர் மேத்ரிக் பட்டேல் என்ற நபருக்கும் திருமணம் நடைபெற்றது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியானது.

பின்னர் கிருத்திகா பேசுவது போன்ற ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டது. அதில், தன் விருப்பப்படியே பெற்றோர் உடன் சென்றிருப்பதாக கிருத்திகா தெரிவித்திருந்தார். பின்னர், கிருத்திகாவும், வினித்தும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது போன்ற ஒரு ஆடியோ வெளியானது. பின்னர், கிருத்திகா ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், வினித்தின் குடும்பத்தார் தன்னை வைத்து தன் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டல் விட்டதாகவும், இதைத் தெரிந்து கொண்டு தனது கணவரான மேத்ரிக் பட்டேல் மூலம் தனது தந்தைக்குத் தகவல் தெரிவித்தேன் என்றும்; தன்னை அழைத்துச் செல்லும்படி கோரிக்கை வைத்ததாகவும், அதனால் தான் பெற்றோர் தன்னை அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் இந்த விவகாரம் தொடர்ந்து வந்தது.இந்த சம்பவத்தில் ஒரு ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்,1 காவலர் உள்ளிட்டோரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். டி.ஜி.பி.இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்கும் சூழலும் உருவானது.

இந்நிலையில் இந்த எட்டு நபர்களும் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கிருத்திகா கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான ஆட்கொணர்வு மனுவில் தற்பொழுது தான் காப்பகத்தில் வைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது தான் விசாரணை தொடங்கியுள்ளது என்றும், மேலும் இந்த வழக்கை பொறுத்தவரை மாப்பிள்ளை வீட்டு தரப்பை தாக்கியதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளதால் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி வழக்கின் விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக தன் மனைவியை மீட்டுத்தரும்படி வினித், தாக்கல் செய்திருந்த மனு விசாரணையில் ஆஜரான கிருத்திகாவிடம், திருமண புகைப்படங்களைக் காட்டி நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். கிருத்திகா கடத்தப்பட்டதில் இரு வேறு கதைகள் உள்ளன. உண்மையை கண்டறிய கிருத்திகா அதிகாரி முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

தொடர் விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ’கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும். கிருத்திகாவை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெற வேண்டும். கிருத்திகாவின் பாதுகாப்பு மிக முக்கியம். பெற்றோர் கிருத்திகாவை பார்க்க அனுமதிக்க வேண்டும். பெற்றோர் கட்டாயப்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என கூறி பிப்ரவரி 13-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: உடன்கட்டை பெருமையான செயலா? கனிமொழி எம்.பி. காட்டம்

ABOUT THE AUTHOR

...view details