தமிழக அரசு மாவட்ட நீதிமன்றங்கள் வரை தமிழே வழக்காடு மொழி என ஆணை பிறப்பித்து, இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஒலிக்கும் நிலை எப்போது உருவாகும் என கேள்வியெழுப்பியுள்ளனர். இந்திய நீதி பரிபாலனத்தின் மாட்சிமை எளிய மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியக் கூறு. அவ்வகையில் பல்வேறு வகையான நீதிமன்றங்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்ட நீதிமன்றங்கள் வரை தமிழே வழக்காடு மொழியாக இருக்கும் என 1976ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. இன்றுடன் 43 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், உயர் நீதிமன்றத்தில் தமிழ் எப்போது வழக்காடு மொழியாகும் என்ற கேள்வி வழக்கறிஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை வழக்கறிஞர் பகத்சிங் தலைமையில் ஒன்பது பேர் மேற்கொண்டனர். இப்போராட்டம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு வழக்கறிஞர் பகத்சிங் வழங்கிய சிறப்பு நேர்காணலில், 'கடந்த 1976-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக ஆங்கிலமே இருந்து வந்தது. கடந்த 1956-ஆம் ஆண்டு ஆட்சிமொழிச் சட்டத்திலேயே இதற்கான கூறுகள் இடம்பெற்றிருந்தும்கூட, 20 ஆண்டுகள் கழித்து 1976இல்தான் தமிழக அரசு மாவட்ட நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளுக்கு மட்டும் வழக்காடு மொழியாக அறிவித்தது.
அதே காலகட்டத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றில் கீழமை நீதிமன்ற நீதிபதி தமிழில் எழுதிய தீர்ப்பு, அவ்வழக்கின் மேல் முறையீட்டில் 'வேஸ்ட் பேப்பர்' என்று உயர்நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்டது என்பதெல்லாம் வரலாறு. ஆனால் தற்போது வரை 1956ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அலுவல்மொழிச் சட்டம் செயலிழந்துள்ளது.
மாநில மொழி உரிமையைப் பாதுகாக்கும் வண்ணம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம் நீதிமன்றங்களாலேயே புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது. கீழமை நீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றத்திலும் தமிழ் முழுமையான வழக்காடு மொழியாகக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நீண்டநாள் கோரிக்கை' என்றார்.
மேலும் இது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ஜான் வின்சென்ட் கூறுகையில், 'தமிழ்நாட்டில் தமிழே வழக்காடு மொழி என்ற கோரிக்கை இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டதாகும். பிரிவு 348-இன் படி உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால், ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் அந்தந்த மாநில மொழியில் வழக்காட அனுமதிக்கலாம் என உள்ளது.
ஒருவர் தாய்மொழியில், அதன் அத்தனைக் கூறுகளையும் தயக்கமின்றியும் சரளமாகவும் முன் வைக்கும்போதுதான் அந்த வழக்கின் முழு பரிமாணத்தையும் தனது வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்த முடியும். அதேபோன்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர் ஆங்கிலத்தில் புலமை கொண்டவராக இருப்பின், அது இன்னும் சிக்கலை உருவாக்கிவிடக்கூடும்.
ஏழரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட பிரான்ஸ் நாடு, நீதிமன்ற வழக்காடு மொழியாக தனது மொழியையே அறிவித்திருக்கிறது. ஆனால் அதைக் காட்டிலும் கூடுதல் மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டில் மட்டும் உயர் நீதிமன்றதில் வழக்காடு மொழி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது' என்றார்.
சோகோ அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான செல்வகோமதி கூறுகையில், 'சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பது பல தரப்பட்ட மக்களின் கோரிக்கையாகும். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 19ஆவது உறுப்பு, கருத்துரிமை குறித்து விளக்குகிறது. இது கருத்தை தெரிவிப்பது மட்டுமன்றி, தகவலைத் தெரிந்து கொள்வதும் அடிப்படை உரிமையாகும்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வந்ததற்குப் பிறகு, எண்ணற்ற வழக்குகள் இங்கே நடைபெற்று வருகின்றன. அவற்றிலெல்லாம் வாதி, பிரதிவாதிகள் பெரும்பாலும் அடித்தட்டு பாமர மக்கள்தான். ஆகையால் புரிந்த மொழியான தாய்மொழி தமிழில் வழக்காடுதல் நடைபெற்றால்தான் அரசியலமைப்புச் சட்டம் அவர்களைச் சென்றடைந்ததாக அர்த்தம்' என்றார்.
வழக்கறிஞர்கள் ஜான் வின்சென்ட், செல்வகோமதி மொழிக்காக பல நூற்றுக்கணக்கான மக்களை இழந்த தமிழகம், ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக தன்னுடைய வழக்காடு மொழியாக தமிழை உயர் நீதிமன்றத்தில் அமர்த்துவதற்கு பெரும் போராட்டமே நடத்தி வருகிறது. இந்த சூழலில், இனியாவது அதற்கொரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா? என்பதுதான் வழக்கறிஞர்கள் மற்றும் தமிழ் மக்களின் வேண்டுகோள்... மத்திய அரசு செவி சாய்க்குமா..?
இதையும் படிங்க: அழிவின் விளிம்பிலிருக்கும் இந்திய மொழிகள்: நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?