தேசிய நெடுஞ்சாலைகளில் அஞ்சலகத்துறை அஞ்சல் வேன் மற்றும் கண்காணிப்பு வாகனங்களுக்கு கட்டண விலக்குக் கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அஞ்சலகத்துறை வாகனங்களுக்கு ஏற்கனவே கட்டண விலக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது சுங்கச்சாவடி கட்டண விதிகள் திருத்தத்தின்போது, அஞ்சலகத்துறைக்குச் சொந்தமான மெயில் வேன்கள், கண்காணிப்பு வாகனங்களுக்கான கட்டண விலக்கு வழங்கப்படவில்லை.
இந்த வாகனங்கள் தபால்களைக் கொண்டு சேர்ப்பதற்காகப் பல சுங்கச்சாவடிகளைத் தினமும் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
கரோனா தொற்றுக் காலத்தில் நாடெங்கிலும் விலையுர்ந்த மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை அர்ப்பணிப்புமிக்க அஞ்சலகத்துறை ஊழியர்கள் கொண்டு சேர்த்தனர். பொதுமக்களுக்கான சேவை நோக்குடன் செயல்பட்டுவரும் அஞ்சலகத்துறை சார்ந்த அஞ்சல் வேன்கள், கண்காணிப்பு வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணங்களிலிருந்து விலக்களிக்க வேண்டியது அவசியமாகும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செலுத்த வேண்டிய கட்டணங்களிலிருந்து அஞ்சலகத்துறை அஞ்சல் வேன்கள், கண்காணிப்பு வாகனங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டண விலக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பெரும் நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்குகிறது பாஜக அரசு - சு. வெங்கடேசன் தாக்கு