தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் உள்ள கூடைப்பந்து பயிற்சி மையத்தை வாரணாசிக்கு மாற்ற திட்டம் - மத்திய அமைச்சருக்கு மதுரை எம்.பி அவசர கடிதம்! - மயிலாடுதுறை கூடைப்பந்து பயிற்சி மையம்

தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு கூடைப்பந்து பயிற்சி மையத்தையும் வாரணாசிக்கு மாற்றம் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

Su Venkatesan MP written to Union Sports Minister urging him to revoke the order to shift the womens basketball training center to Varanasi
பெண்கள் கூடைப்பந்து பயிற்சி மையத்தை வாரணாசிக்கு மாற்றுவதை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சு வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்

By

Published : Apr 11, 2023, 12:41 PM IST

Updated : Apr 11, 2023, 5:06 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள ஒரே பெண்கள் கூடைப்பந்து பயிற்சி மையம் வாரணாசிக்கு மாற்றம் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "பல்வகை விளையாட்டுகளுக்கான இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்தின் பயிற்சி மையங்கள் 37 நகரங்களில் உள்ளன. அதில் இரண்டு தமிழ்நாட்டில் உள்ளன .மயிலாடுதுறையில் உள்ள பயிற்சி மையம், கூடைப்பந்து மற்றும் கைப்பந்துக்கான அங்கீகாரம் பெற்று பயிற்சியை வழங்கி வருகிறது. இது பெண் கூடைப்பந்து வீரர்களுக்கான சிறப்பு மையம். பெண் விளையாட்டு வீரர்கள் அங்கு கூடைப்பந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்காக அங்கு செல்பவர்கள் மயிலாடுதுறை பள்ளியிலேயே அனுமதி பெற்று பயின்றும் வருகிறார்கள்.

தற்போதைய இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டன் புஷ்பா மற்றும் அணியில் உள்ள சத்யா ஆகியோர் இந்த மயிலாடுதுறை மையத்தில் பயிற்சி பெற்றவர்களே. ரயில்வேயில் விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில் பணி நியமனமும் பெற்றார்கள். இவர்கள் 2018-இல் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுக்களிலும் பங்கேற்றவர்கள். புஷ்பா நாகப்பட்டினம் மாவட்டத்தின் சிறிய கிராமமான முடிகண்ட நல்லூரில் இருந்து மயிலாடுதுறை மையத்தில் பயிற்சி பெற்றவர்.

இப்படிப்பட்ட மயிலாடுதுறை மையத்தில் கூடைப்பந்து, கைப்பந்து பயிற்சி பெறுவதற்கு தற்போது ஆபத்து எழுந்துள்ளது. இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India) வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 518/SAI/ OPS/STC review/2022 -23/ 05.04.2023, மயிலாடுதுறையில் உள்ள கூடைப்பந்து, கைப்பந்துக்கான பயிற்சி அங்கீகாரத்தை ரத்து செய்து வேறு மையங்களுக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இன்னொரு பயிற்சி மையமான சேலத்தில் கூடைப்பந்துக்கான அங்கீகாரம் இருந்தாலும் அங்கு பெண்களுக்கான இடங்கள் தரப்படவில்லை. கைப்பந்து பயிற்சிக்கு தமிழ்நாட்டில் வேறு பயிற்சி மையமே இல்லை. அப்படியெனில் பெண் கூடைப்பந்து வீரர்கள், பயிற்சிக்கு எங்கு செல்வார்கள்?

உத்தரப்பிரதேசம், வாரணாசி மையத்தில் கூடைப்பந்து பெண் வீரர்கள் பயிற்சி பெற இடங்கள் தரப்பட்டுள்ளன. இல்லையெனில் சட்டிஸ்கரில் உள்ள ராஜ்னந்த்கன் நகருக்கு செல்ல வேண்டும். இந்த இரண்டு ஊர்களில் மட்டுமே கூடைப்பந்து பயிற்சிக்கு பெண்களுக்கான இடங்கள் மேற்கண்ட சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் விமரிசையாக நடத்தப்பட்டது. கலாச்சார பாலம் அமைக்கப் போகிறோம் என்றெல்லாம் அறிவித்தார்கள். நமது முடிகண்ட நல்லூர் புஷ்பாக்கள் இந்த பாலத்தின் வழியாக வாரணாசிக்கு செல்ல வேண்டியிருக்கும் என அப்போது அறிந்திருக்கவில்லை. தற்போது அங்கு மதுரை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனைகள் பள்ளிப் படிப்பையும், கூடைப்பந்து பயிற்சியையும் ஒரு சேர பெற்று வருகிறார்கள்.

மயிலாடுதுறை பயிற்சிக்காக பள்ளி படிப்பையே அந்த ஊருக்கு மாற்றியுள்ள மாணவிகளின் கதி என்ன? அணியின் கேப்டன் ஆகக் கூட உயர முடிந்த எங்கள் தமிழ்நாட்டின் புஷ்பாக்கள் எதிர்காலத்தில் வாரணாசி வரை பயிற்சிக்காக ஓட வேண்டி இருப்பதுதான் வாரணாசி சங்கமமா? தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் வஞ்சனை இது.

இந்த உத்தரவை ரத்து செய்து மயிலாடுதுறையிலேயே கூடைப்பந்து, கைப்பந்து பயிற்சி மையம் தொடர வழி வகை செய்யுமாறு ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்திய விளையாட்டு ஆணைய பொது இயக்குனர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: இரட்டை இலை சின்னத்தை கேட்டு பெற்று கர்நாடக தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் - ஓபிஎஸ்

Last Updated : Apr 11, 2023, 5:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details