மதுரை: மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி, இணைத்தலைவர் சு.வெங்கடேசன் எம்பி தலைமையில் இன்று (அக்.10) நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன் எம்பி, “மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்க வேண்டும். அதேபோல, பைலேட்டர் ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தை இணைக்க வேண்டும். மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வாரத்திற்கு மூன்று நாட்கள் மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி முதல் தினசரி விமானமாக இயக்கப்பட இருக்கிறது.
மதுரை விமானநிலையத்தின் ஓடு பாதையை விரிவாக்குகிற விஷயத்தில் நிலம் கையகப்படுத்த வேண்டிய பகுதிகள் என்பது முழு முற்றாக முடிவடைந்து இருக்கிறது அதில் கடந்த ஓராண்டாக தமிழக அரசு பல நல்ல முயற்சிகளை செய்தது. அதன் விளைவாக தனி நபர்களிடமிருந்து நிலங்கள் எடுக்கப்பட வேண்டியது முடிவு பெற்றுள்ளது. இரண்டு குளங்களினுடைய சிறு பகுதி என்பது வகை மாற்றம் செய்யப்பட வேண்டிய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அது முடிவடையும்' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 'இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து மதுரை விமான நிலையம் 24X7 விமான நிலையமாக செயல்படும் என்று விமானத்துறை அறிவித்த அறிவிப்பு, இப்பொழுது வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. மதுரையின் விமான நிலைய வளர்ச்சியில் ஒன்றிய அரசு அக்கறையின்மை தொடர்ச்சியாக நீடிக்கிறது. பல அழுத்தங்களுக்கு பிறகு தான் 24x7 என்பதை ஒத்துக்கொண்டு அவர்கள் அறிவித்தார்கள். ஆனால், இன்றைக்கு வரை அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள். அது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தென் மாவட்டங்களில் இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்து அதேபோல மதுரை விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்களையும் இணைத்து ஒன்றிய அமைச்சரை சந்தித்து இது குறித்து வலியுறுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது' என்று கூறினார்.