தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 7, 2021, 4:33 PM IST

ETV Bharat / state

மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயம் இல்லை - தமிழ்நாடு அரசு

மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாக வருமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது.

மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயம் இல்லை
மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயம் இல்லை

மதுரை: நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாப் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்துள்ளார்.

அதில், "கரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் நிலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்றிருக்கும் சூழலில், செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்து ஆணை பிறப்பித்தது.

பள்ளி செல்லும் மாணவர்கள் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருப்பதும், அதனை முறையாகப் பின்பற்றுவதும் சாத்தியமில்லாதது. கரோனா தடுப்பூசியை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்குச் செலுத்துவது தொடர்பாக இதுவரை தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வது கரோனா நோய்தொற்றுப் பரவலை அதிகரிக்கச் செய்ய அதிக வாய்ப்புள்ளது.

சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இடையேயான கற்றலில் வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளன. அத்தோடு, இது ஆசிரியர்களுக்கும் கூடுதல் சுமையாக அமையும்.

பெற்றோரும் மிகுந்த அச்சமான சூழலிலேயே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவர். ஆகவே கரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை நெருங்கியுள்ளதைக் கருத்தில்கொண்டு, நேரடியாக அல்லாமல், ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் வகுப்புகளைக் கவனிக்க அனுமதிக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், "மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாக வருமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்" என அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பில், "தினசரி கரோனா நோய்த்தொற்றும் அதிகரித்துவருகிறது. ஆகவே நேரடி வகுப்புகளுக்குத் தடைவிதிக்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்தார். அதற்கு நீதிபதிகள், "மனுதாரரின் மனுவில் அதற்கான கோரிக்கை எதுவும் இல்லை, ஆகவே மனுதாரர் விரும்பினால் புதிதாக மனுவைத் தாக்கல்செய்யலாம்" எனத் தெரிவித்தனர்.

அரசுத் தரப்பில், "6 முதல் 7 மாணவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்தத் தொடர்பு மூலம் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது என்பது குறித்து கண்டறியப்படவில்லை. தற்போது தினசரி நோய்த்தொற்றும் குறைந்துவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் தந்தை கைது!

ABOUT THE AUTHOR

...view details