குழந்தைகள் விற்பனை விவகாரம்: ஏழு பேர் கைது - Children sales in madurai
மதுரை: அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் மையத்திலிருந்து குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் செயல்பட்டுவந்த இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் மையத்திலிருந்து இரண்டு குழந்தைகள் பணத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகளை வாங்கிய கல்மேடு பகுதியைச் சேர்ந்த சகுபர் சாதிக், அனீஸ் ராணி, இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன், பவானி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் இதயம் அறக்கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, முகவர்களாக செயல்பட்டுவந்த செல்வி, ராஜா உள்பட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முன்னதாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார், அவரது உதவியாளர் மதார்ஷா ஆகிய இருவரையும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிவக்குமாரின் மனைவி, அறக்கட்டளையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கலைவாணி என்ற பெண் 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில இளைஞர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.