தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 11, 2021, 4:43 PM IST

ETV Bharat / state

மதுரை அருகே கோயில் நுழைவு போராட்டம் நடத்திய பட்டியல் இன மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

மதுரை செக்கானூரணி அருகே அண்மையில் வழிபாட்டு உரிமையை மீட்பதற்காக கோயில் நுழைவு போராட்டம் நடத்திய பட்டியலினத்தவர் மீது நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை
மதுரை

மதுரை:செக்கானூரணி அருகேயுள்ள அ.கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன மக்கள், அங்குள்ள கருப்பசாமி கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதைக் கண்டித்து கடந்த ஜூலை 30 ஆம் நாள் போராட்டம் நடத்தினர்.

அதன்பின் அறநிலைத்துறை அலுவலர்கள் துணையோடு அக்கோயிலுக்குள் நுழைந்தனர். கோயிலில் பூசாரிகளாக உள்ள பட்டியல் இன குடும்பத்தினரைத் தவிர, ஏனைய பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்துள்ளது.

இந்தப் பிரச்சினை அண்மையில் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, தங்களுக்கான உரிமையைக் கோரி பட்டியலினத்தவர் போராட்டம் நடத்தினர்.

மதுரை தாக்குதல்

நீதிமன்ற உத்தரவில் தீர்வு எட்டப்படவில்லை

இந்தப் பிரச்சினை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவ்வூரைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். வட்டாட்சியர் தலையிட்டு 12 வாரங்களுக்குள் இதற்கு முடிவு எட்டப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் தீர்வு எட்டப்படவில்லை. இதற்காக அதிகார மட்டத்தில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அ.கொக்குளம் கருப்பசாமி கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது மட்டுமன்றி, இதன் பேரில் நன்செய், புன்செய் நிலங்கள் எட்டு ஏக்கரில் உள்ளன.

ஆயுதங்களுடன் தாக்குதல்

இந்நிலையில் நேற்று (அக்.10) நள்ளிரவு குறிப்பிட்ட பட்டியல் இன பிரிவினர் வசிக்கும் பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர், ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தங்களுக்கு பாதுகாப்பு தரக் கோரி நள்ளிரவில் ஆ.கொக்குளம் கிராம மக்கள் மதுரை-தேனி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இருவர் கைது

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செக்கானூரணி காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அ.கொக்குளம் அயோத்திதாசர் நகரில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: என் மீது சுமத்தப்பட்ட புகார் ஆதாரம் அற்றது - திமுக எம்பி ரமேஷ்

ABOUT THE AUTHOR

...view details