தமிழ்நாடு

tamil nadu

சவுக்கு சங்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செப்.15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீதித்துறையில் ஊழல் நிறைந்துள்ளதாக பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை, செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

By

Published : Sep 8, 2022, 7:12 PM IST

Published : Sep 8, 2022, 7:12 PM IST

savukku
savukku

மதுரை:ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என கடந்த ஜூலை 22ஆம் தேதி, யூடியூபர் சவுக்கு சங்கர் யூடியூப் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி, தன் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக கூறப்படும் வீடியோ பதிவு அல்லது அதற்கான தட்டச்சு பதிவை வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அதோடு பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசமும் கோரினார்.

அதற்கு நீதிபதிகள், "வீடியோவை வெளியிட்டது, பேசியது நீங்கள். பின்னர் எதற்காக கேட்கிறீர்கள்? உங்களுக்கு அவற்றின் நகல் தேவையா?" என கேள்வி எழுப்பினர். அதற்கு சவுக்கு சங்கர் தரப்பில், ஆம் என பதிலளித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற பதிவாளரிடம் அதன் நகல்களை சவுக்கு சங்கரிடம் வழங்க உத்தரவிட்டனர்.

சவுக்கு சங்கர் தரப்பில், இது எந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. புதியதா? பழையதா? என கேள்வி எழுப்பப்பட்டது. நீங்கள் பேசியது உங்களுக்கு நினைவில்லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, "நான் பல பேட்டிகளை வழங்கியுள்ளேன். அனைத்தையும் என்னால் நினைவில் கொள்ள இயலாது. கால அவகாசம் தேவை" என சவுக்கு சங்கர் பதிலளித்தார்.

அதையடுத்து பதில் மனு தாக்கல் செய்ய 6 வார கால அவகாசம் தேவை என எழுத்துப்பூர்வமாக கோரினார். அதற்கு நீதிபதிகள், "இதுகுறித்து எவ்வித பதிவையும் பதிய மாட்டேன் என உறுதி அளித்தால், கால அவகாசம் வழங்கலாம்" என தெரிவித்தனர். அதற்கு சவுக்கு சங்கர் தரப்பில், உறுதி வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த வாரங்களிலும், இன்றும் இந்த வழக்கு குறித்து சவுக்கு சங்கர் பேசியுள்ளார், நீதிமன்றத்தின் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் என பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை வரும் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: நீதித்துறையில் ஊழல் உள்ளது எனும் கருத்தில் உறுதியாக இருக்கிறேன் - நேரில் ஆஜரான சவுக்குசங்கர் பதில்

ABOUT THE AUTHOR

...view details