மதுரை மாவட்டம் குருவித்துறை வைகை ஆற்றில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண்டிய மன்னன் கட்டிய தடுப்பணையைச் சீரமைத்து தேசிய மரபுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள கோயில், குருவித்துறை. இங்குள்ள அருள்மிகு சித்திரரத ஸ்ரீ வல்லபபெருமாள் திருக்கோயில் மிகப்புகழ்பெற்றதாகும். இந்தக்கோயில் வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது.
பாண்டிய மன்னனிடம் உழவர்கள் கோரிக்கை
கோயிலிலிருந்து ஏறக்குறைய அரை கிலோ மீட்டர் தொலைவில் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பணை ஒன்று, வைகை ஆற்றின் குறுக்கே அரைவட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இது கி.பி.12ஆம் நூற்றாண்டில் அப்போது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாகும்.
வடக்கு-தெற்காக ஓடி வரும் வைகை, இந்த இடத்தில் கிழக்கு-மேற்காகத் திரும்புகிறது. அப்போது ஆற்றில் ஓடி வரும் தண்ணீரோடு, ஆற்று மணலும் வாரி அடிப்பதால், அருகிலுள்ள வேளாண் நிலங்கள் பாழ்படுவது இயல்பான ஒன்றாக இருந்தது. இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், உழவர்களும் பாண்டிய மன்னனிடம் இதற்கொரு தீர்வு வேண்டி கோரிக்கை விடுக்கின்றனர்.
கரிகாலச் சோழன் அமைத்த கல்லணை போன்ற உருவாக்கம்
வைகையின் அக்குறிப்பிட்ட பகுதியை ஆய்வு செய்த பாண்டிய மன்னனின் அரசு அலுவலர்கள், அங்கு ஒரு தடுப்பணை கட்ட முடிவு செய்கின்றனர். அதனை அரை வட்ட வடிவத்தில், கரிகால் சோழன் அமைத்த கல்லணை போன்று, வெறும் கற்களைக் கொண்டு அதே தொழில்நுட்பத்தில் இந்த அணை அமைக்கின்றனர். விவசாய நிலங்களில் மணல் வாரி இறைக்கப்படுவது தடுக்கப்பட்டு, ஆற்றின் இயல்பான நீரோட்டமும் தடையின்றி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
அணை கட்டப்பட்ட பின்பு அங்கிருந்து, உருவாக்கப்பட்ட வாய்க்கால் மூலமாக அங்கிருந்து சுமார் 10 கி.மீ., தொலைவிலுள்ள தென்கரை பெரிய கண்மாய்க்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாய்க்கால் ஸ்ரீ வல்லப பேராறு என்றும்; பாண்டியன் கால்வாய் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
உலக நீர்ச் சட்டங்களுக்கு முன்னோடி
பாண்டிய மன்னர்களின் நீர் மேலாண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழும் இந்த அணை, தொழில்நுட்ப ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தப் பாண்டியன் கால்வாயை அடிப்படையாகக் கொண்டு, பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்ட பாசனச் சட்டம், உலக நீர்ச் சட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்குறிப்பிட்ட சட்ட ஷரத்துகள், குருவித்துறை பெருமாள் கோயிலில் கற்றளிக் கருவறையின் வெளிப்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
இதன் காலம் கி.பி.1117ஆம் ஆண்டாகும் (SII Vol.XIV.No.236). சுமார் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும்கூட, இத்தடுப்பணை இன்றும் பயன்பாட்டில் இருப்பது வியக்கத்தக்கதாகும்.
பாண்டியன் சிற்றணை: 'நீர் மேலாண்மைக்கான ஆயிரமாண்டுகல் பழமையான அடையாளம்'