மதுரை: இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா. இவர் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் SETC பேருந்து எண்- TN 01 AN 3213 என்ற கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார்.
அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை எனக் கூறி பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளார். அப்போது பதிலளித்த சச்சின் சிவா இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என கூறியபோது மாற்றுத்திறனாளி சிவாவை பார்த்து "முகத்தை உடைத்து விடுவேன் எனக்கு எல்லாம் தெரியும்" என கூறி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இது குறித்து கேட்டபோது "அப்படித் தான் பேசுவேன் உன்னை வண்டியில் ஏற்ற முடியாது" எனக்கூறி வண்டியில் ஏற்றுவதற்கு மறுத்துள்ளார்.
இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவா கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அதே பேருந்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதிக்கு வந்த நடத்துனர் "நீ என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது" என அலட்சியமாக பேசி மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.