காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள்: மதுரை போலீசாரின் புதிய முயற்சி! - குற்றம், குற்றவாளிகள் வலைப்பின்னல் கண்காணிப்பு அமைப்புகள்
மதுரை: மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்கும் முகமாக வரவேற்பு காவலர்கள் உருவாக்கப்பட்டு உள்ளனர். இம்முயற்சி பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள்: மதுரை போலீசாரின் புதிய முயற்சி
மதுரை மாநகரத்தில் இயங்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளராக காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களில் கூடுமானவரை பெண் காவலர்கள் வரவேற்பாளராக இருக்கின்றனர்.
இவர்களுக்கு வேறுபணி வழங்கப்படாமல் வரவேற்பாளராக மட்டும் பணிபுரிய பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரவேற்பாளர்களை நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் பிரத்தியேக அடையாளக்குறி ( வில்லை ) (Badge) அணிந்திருப்பர். இந்த வரவேற்பு காவலர்கள் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு ஆகிய அனைத்திற்கும் பொதுவான அலுவலராக செயல்படுவர்.
மேலும், வரவேற்பு காவலரிடம் தகவல் பெறக்கூடிய பொது மக்கள் அமர்வதற்காக போதுமான இருக்கை வசதிகள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிகம் படிக்காத புகார் மனு எழுத இயலாத நிலையில் காவல் நிலையத்திற்கு வருகின்ற பொது மக்களுக்கு அவர்களின் பிரச்சனைகளை பரிவுடன் கேட்டு புகார் மனு எழுதிக்கொடுப்பதோடு, காணாமல் போன ஆவணங்கள் (Missing Documents) தொடர்பான புகாரினை குற்றம், குற்றவாளிகள் வலைப்பின்னல் கண்காணிப்பு அமைப்புகள் ( CCTNS ) வலைதளத்தில் எவ்வாறு பொது மக்கள் பதிவு செய்யவேண்டும் என்பது பற்றியும், இதற்கு காவல்துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ள உதவிகரமாக இருப்பர்.
இனி மதுரை மாநகரிலுள்ள காவல் நிலையங்களிலுள்ள வரவேற்பு காவலர்களின் பணியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு, மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கேட்டுக்கொண்டுள்ளார்.