மதுரை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission - TNPSC) வெளியிட்ட 2023ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பலதரப்பு மாணவ மாணவியரை பெரிதும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துடன் பகிர்ந்து கொண்டவற்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
தமிழ்நாடு போட்டித் தேர்வு கல்வி மையங்களுக்கான சங்கத்தின் தலைவரும் ரேடியன் ஐஏஎஸ் அகாடமியின் (Radian IAS Academy) நிறுவனருமான ராஜபூபதி இன்று (டிச.17) ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில், 'டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான வரும் 2023-க்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தேர்வர்களும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இந்த அட்டவணையை எதிர்பார்ப்பது வழக்கம்.
பலருக்கும் ஏமாற்றமே:ஆனால், இந்த முறை இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பெருந்தொற்று காலம், ஓய்வுப் பெறும் வயது 60ஆக உயர்த்தியது, கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித புது அறிவிப்பும் வராதது என பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே பல ஆயிரக்கணக்கான தேர்வர்கள், குறிப்பாக ஏழைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் பயின்ற தேர்வர்களுக்கு குரூப்-1, 2 மற்றும் 4 ஆகியவை மிகவும் நம்பிக்கைக்குரியதாக எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வினை பெண்கள், கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள் எழுதினர். அவர்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு இதில் உண்டு. வழக்கமாக 10 ஆயிரம், 15 ஆயிரம் இடங்களுக்கு தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு அதுவும் குறைந்து 5 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே நடைபெற்றது. ஆகையால், வருமாண்டு இதனை சரிசெய்து அதிக எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்களுக்கு குரூப் தேர்வுகள் நடைபெறும் என தேர்வர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
நிலுவையிலுள்ள பணிகளின் நிலை என்ன?:அந்தந்த துறை மற்றும் வாரியங்கள் பணி நியமனம் செய்வதைத் தடை செய்து, அவை அனைத்தையும் போட்டித் தேர்வுகளின் மூலமே நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு அனைத்துத் தரப்பிலும் வரவேற்பைப் பெற்றது. இதன் காரணமாக, இதுபோன்ற நியமனங்கள் வாயிலாக லஞ்சம் கரைபுரண்டோடியது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை செயல்படுத்தியிருந்தால் பணியிடங்களின் எண்ணிக்கை வெகுவாகக் கூடியிருக்கும். டிஎன்இபி-யில் (TNEB) அறிவிக்கை வெளியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை அப்பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை. இதேபோன்ற நிலைதான் ஆவின்(Avin), போக்குவரத்து போன்ற துறைகளிலும் நிலவுகிறது.
கனவுகளை தமிழ்நாடு அரசு கானல்நீராக்குமா?:இந்த நிலையில், வெளியான 2023ஆம் ஆண்டிக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கால அட்டவணை மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும், அந்த அட்டவணையில் வருகின்ற 2023ஆம் ஆண்டு குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை இடம் பெற்றுள்ளது. ஆனால், அந்த தேர்வும்கூட 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே என்ற அறிவிப்பு வேதனை தருகிறது. ஆக, டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் எதுவும் வருமாண்டு நடைபெறவில்லை என்பதுதான் இதில் முக்கியமானது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் 3.5 லட்சம் பேருக்கு அரசுப்பணிகள் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர். ஆனால், தற்போது இது கானல்நீராகிவிட்டது. இந்த அறிவிப்பின் வாயிலாக தமிழ்நாட்டு போட்டித் தேர்வர்கள் அனைவரும் பெரும் மனஉளைச்சலில் உள்ளனர். தமிழ்நாட்டில் வேலையின்மை பிரச்சனை மிகப்பெரிதாக உள்ளது.
தனியார்மயமாக்கலில் அவுட்சோர்சிங் முறை:தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் பட்டதாரி இளைஞர்கள் ஒன்றுகூடி மர நிழல்களிலோ, ரயில் நிலையங்களிலோ (அ) பள்ளிகளின் வளாகத்திலோ அமர்ந்து போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் காட்சியை இயல்பாகக் காண முடியும். இதற்கிடையே, தமிழ்நாடு அரசு மனிதவள சீர்திருத்தக்குழு ஒன்றை அமைக்க அரசாணை எண் 115 வாயிலாக அறிவிப்பு செய்துள்ளது. குரூப்-சி மற்றும் டி (Groub-C, Groub-D) பணியாளர்களை வெளி முகமைகள் என்ற அவுட்சோர்சிங் முறை (Outsourcing method) மூலமாக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முயற்சி தனியார் மயமாக்கத்தின் (Privatization) முதல் படியாகும். சி மற்றும் டி நிலை பணியாளர்களில் தொடங்கி படிப்படியாக அரசு துறையின் அனைத்து நிலைகளிலும் இது பரவலாக்கப்படும் என அஞ்சுகிறோம்.