மதுரை, அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம், திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோயிலில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டதிற்கு முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.
இக்கூட்டட்தில் திருமண உதவித் தொகை வழங்கிய அவர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் நீட்டை ரத்து செய்யும் வழி எங்களுக்குத் தெரியும் என்று கூறி அதைத் தேர்தல் வாக்குறுதியாகவும் கொடுத்தார்கள்.
அதிமுக ஆட்சியின்போது நீட் தேர்வில் கடைசி வரை சட்டப் போராட்டம் நடத்தினோம். நீட்டுக்கு எதிராக மசோதாவை நிறைவேற்றி ஒப்புதலுக்கு வைத்தோம். நீட் சமூக நீதிக்கு எதிரானது என்றுகூட போராடினோம்.
7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நிறைவேற்றிய ஈபிஎஸ்
இது ஒருபுறம் இருந்தாலும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி, இன்றைக்கு 435 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
ஆனால் தற்போது திமுக அரசு முன்னாள் நீதியரசர் ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது. அந்தக் குழு நீட் தேர்வை பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்கள். நாங்களும் இதை வரவேற்கிறோம். ஆனால் இது அனைவருக்கும் முன்பே தெரிந்த விஷயம்.
மாணவர்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்த திமுக
தொடர்ந்து இந்த ஆண்டு நீட் தேர்வு தேதி வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர். நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்கு ஏமாற்றத்தை முதல் பரிசாக திமுகவினர் வழங்கி உள்ளனர். அதேபோல் சுகாதார அமைச்சரும் நீட் தேர்வு நல்லது என்றும், மருத்துவப் படிப்புக்கு பயன்பெறும் என்றும் நேரத்திற்கு தகுந்தார் போல் பேசுகிறார்.
”நம்பி ஓட்டுப் போட்டோம், இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கிறோம்” என்று மக்கள் சொல்கிறார்கள். மாணவர்களை ஏமாற்றியது போதும் என்று இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மாணவர் நலனுக்காக குரல் கொடுத்துள்ளார்.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால் மதுரை, புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதே போன்று தங்கள் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போன்று மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கையை திமுக மேற்கொள்ள வேண்டும்.
மேகதாதுவில் தமிழர் உரிமையை நிலைநாட்ட வேண்டும்
மேகதாது பிரச்சனையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதிமுக ஆட்சி இருக்கும்போது தொடர்ந்து எதிர்க்கப்பட்டு அணை கட்டப்படாமல் தடுக்கப்பட்டது. ’மேகதாது அணையைக் கட்டுவோம்’ என்று தற்போது கர்நாடகா கூறுகிறது. அப்படி கட்டினால் நமது நெற்களஞ்சியம் எல்லாம் பாலைவனம் போல் ஆகிவிடும்.
இந்த அணை திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசின்போது பூமி பூஜை போடப்பட்டு 80 விழுக்காடு வேலைகள் முடிவடைந்து விட்டன. ஆகவே மேகதாதுவில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட எந்தத் தியாகத்தையும் அரசு மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்று கூறிவருகிறார்கள். அப்படியானால் எம்எல்ஏக்களுக்கு என்ன வேலை? சிறப்பு குறை தீர்க்கும் முகாமிற்கு வந்த 10 லட்சம் மனுக்களுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீர்வு கண்டுள்ளார். அதேபோல் கடந்த பத்தாண்டுகளில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இல்லை.
முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் 35 லட்சம் நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. அதேபோல் சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி, குடிமராமத்து திட்டம் என்று கடந்த நான்கு ஆண்டுகளில் 40 ஆண்டுகால வளர்ச்சியை தமிழ்நாட்டிற்கு அதிமுக உருவாக்கித் தநதுள்ளது” எனப் பேசினார்.
இதையும் படிங்க:பூசாரிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கிராம மக்கள்!