மதுரை: கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதில், பெரும்பாலானோர் ஆக்ஸிஜன் தேவையுடன் வருகிற சூழ்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருகிறது.
தற்போது, அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பிவிட்டன. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய ஆக்ஸிஜனும் வராத காரணத்தினால், ஆக்ஸிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் மருத்துவமனை முன்பு பல மணி நேரம் காத்திருக்கும் அசாதாரண சூழ்நிலை நிலவியது. மேலும், சிகிச்சை பெறும் நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆனால் மட்டுமே காத்திருப்போர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் நிலை உள்ளது.