தமிழ்நாடு

tamil nadu

மதுரையை இழிவுபடுத்தும் வகையில் டிக்டாக் - வெறுப்பேத்தும் பிராங்க் ஷோக்கள்

மதுரையை இழிவுபடுத்தும் வகையில் இளைஞர்கள் டிக்டாக் வெளியிட்டு பொதுமக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளனர். இது குறித்து காவல் துறை கண்டுகொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

By

Published : Feb 1, 2020, 3:42 PM IST

Published : Feb 1, 2020, 3:42 PM IST

prank-tiktok-shows-about-madurai
prank-tiktok-shows-about-madurai

பொதுவாக மதுரை என்றாலே வன்முறை நிறைந்த நகரம் என்ற சித்திரிப்பை காலங்காலமாக தமிழ் திரைப்படங்கள் செய்துவருகின்றன. வெட்டு, குத்து, கொலை என்று ரத்தக்கறை படிந்த மண்ணாக மதுரையை காட்டுவதில் திரைப்படத் துறைக்கு அத்தனை ஆர்வம்.

இது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்ததற்குப் பிறகு தற்போது திரைப்படத் துறை அடக்கி வாசித்துவருகிறது. ஆனாலும் டிக் டாக், ப்ராங்க் ஷோக்கள் தயாரிக்கும் இளைஞர்கள் இதுபோன்ற விஷயங்களைக் கவனத்தில் கொள்வதில்லை.

நகைச்சுவைக்கு செய்கிறோம் என்ற பெயரில் மதுரையை இழிவுபடுத்துகின்ற செயல்களை மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக அண்மையில் வெளியான ஒரு டிக்டாக்-கில் ஒட்டுமொத்த மதுரையும் குடிகாரர்களால் நிறைந்தது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் வெளியிட்டுள்ளனர்.

தற்போது சமூக வலைதளங்களில் பரவிவரும் இந்த காணொலிகளால் பொதுமக்கள் வெறுப்படைந்துவருகின்றனர். இதுபோன்ற டிக்டாக் ப்ராங்க் ஷோக்கள் தனி நபரைக் குறித்து அவதூறு செய்கின்ற தன்மையை போன்றே வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரின் பெருமையை சிதைக்கின்றன.

மதுரையை இழிவுபடுத்தும் வகையில் டிக்டாக்

இது வெளிமாநில, வெளிநாட்டைச் சேர்ந்த நபர்களிடம் மதுரை குறித்த எதிர்மறையான பார்வையை உருவாக்கிவிடும் அபாயம் இருக்கிறது. ஆகையால் மதுரை மாநகர காவல் துறை உடனடியாக இது விஷயத்தில் தலையிட்டு இதுபோன்ற உள்ளூரின் பெருமையைச் சிதைக்கின்ற முயற்சிகளில் ஈடுபடுகின்ற நபர்களை எச்சரித்து அறிவுறுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து மதுரை மாநகர காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, இதுபோன்ற காணொலிகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து சைபர் க்ரைம் மூலமாக நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details