திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோழ பூபதி ராஜா. இவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "நான் பொறியியல் படிப்பு முடித்துள்ளேன். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறேன்.
இந்தநிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதியன்று 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வானையம் சார்பில் வெளியிடப்பட்டது.
இதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன். எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு உள்ளிட்டவைகளில் பங்கேற்றிருந்தேன். நான் அனைத்து தேர்வுகளிலும் பங்கேற்றேன். இறுதியில் நான் 100 மதிப்பெண்களுக்கு 74 மதிப்பெண் பெற்றேன்.
ஆனால், எனக்கு 0.5 மதிப்பெண் வழங்கப்படவில்லை. இதனால் எனக்கு உதவி ஆய்வாளர் பணிவாய்ப்பு 0.5 மதிப்பெண் வித்தியாசத்தில் பறிபோனது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியன்று உதவி ஆய்வாளர்கள் பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
தேர்வு இறுதி பட்டியலில எம்பிசி பிரிவினருக்கு 74.5 என்று கட் ஆப் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நான் அனைத்திலும் சேர்த்து 74 மதிப்பெண் பெற்றுள்ளேன். 0.5 மதிப்பெண் வித்தியாசத்தில் என் பெயர் பட்டியலில் வரவில்லை என்.எஸ்.எஸ்-ல் சான்றிதழக்காக எனக்கு 0.5 மதிப்பெண் வழங்கவில்லை.
எனக்கு என்.எஸ்.எஸ் சான்றிதழுக்கு மதிப்பெண் வழங்கியிருந்தால், நான் தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருப்பேன். சான்றிதழ் சரி பார்பின்போது, நான் எனது என்.எஸ்.எஸ் சான்றிதழ் உள்பட அனைத்து சான்றிதழ்களையும் சமர்பித்து விளக்கமளித்தேன். எனக்கு 0.5 மதிப்பெண் வழங்கப்படவில்லை. இதனால், எனக்கு உதவி ஆய்வாளர் பணி வாய்ப்பு பறிபோனது.
எனவே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதிப் தேர்வு பட்டியலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
எனக்கு என்.எஸ்.எஸ் சான்றிதழுக்கு 0.5 மதிப்பெண் வழங்கி தேர்வு பட்டியலில் எனக்கு ஒரு இடம் ஒதுக்கி வைக்க உரிய உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி கிருஷ்ண குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், மனுதாரர், குறிப்பிட்ட சான்றிதழை, இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை எனக் கூறினார். இதை தொடர்ந்து நீதிபதி, இது குறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.