Water tank collapse condition: மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அலங்கம்பட்டி கிராமத்தில் சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மிகவும் சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது.
இதன் அருகே நெருக்கமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் குழந்தைகள் வந்து செல்லும் அங்கன்வாடி மையமும் உள்ளதால், அதனை உடனடியாக சீரமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அலங்கம்பட்டி வார்டு உறுப்பினர் அழகு கூறுகையில், "கடந்த 1999ஆம் ஆண்டு இந்த உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
தற்போது 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த கிராமத்தில் வசிக்கும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் ஒரே குடிநீர் ஆதாரம் இதுதான்.
இது இடிந்து விழும் நிலையில் உள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. ஆகையால், தற்போது உள்ள மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கத் தொட்டியை அமைக்க வேண்டும்" என்றார்.
நீர்த்தேக்கத்தொட்டி இடியும் அபாயம்
அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் அழகு என்பவர் கூறுகையில், "இந்த உயர் நிலை நீர்த்தேக்கத்தொட்டி தொடர்பாக அலுவலர்களிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம்.
அதுமட்டுமன்றி கிராம சபைக் கூட்டங்களிலும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.