தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமமுக கூட்டணி வேட்பாளர் உட்பட 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு! - மதுரை நீதிமன்ற செய்திகள்

காவல்நிலையத்தில் இறந்தவரின் தந்தையை மிரட்டியதாக திருமங்கலம் அமமுக கூட்டணி வேட்பாளர் ஆதிநாராயணன் உட்பட 4 பேரை நேரில் ஆஜர்படுத்த மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர் நீதிமன்ற கிளை
மதுரை உயர் நீதிமன்ற கிளை

By

Published : Apr 10, 2021, 4:13 AM IST

மதுரை: மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். கடத்தல் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இவரை அவனியாபுரம் காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு காவலர்கள் அடித்து துன்புறுத்தியதால் பாலமுருகன் மரணமடைந்ததாகவும், அவரது உடற்கூராய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும், நீதிபதி விசாரிக்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி, பாலமுருகனின் தந்தை முத்துகருப்பன் ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.

வழக்கு விசாரணை நிலுவையில் இருந்த போது, முத்துகருப்பன் தனது மனுவைத் திரும்ப பெற்றார். இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி டிபேன், மதுரை உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் காவலர்களின் அச்சுறுத்தல் காரணமாக முத்துகருப்பன் தனது மனுவை திரும்பப் பெற்றதாக கூறியிருந்தார்.

இக்கடிதத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் தரப்பில் தாமாக முன்வந்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாலமுருகன் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கூடுதல் பதிவாளர் ஜெனரல் தரப்பில் மிரட்டல் ஆடியோ உரையாடல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் தொலைப்பேசியில் பேசியதாக கூறப்படும் ஆதிநாராயணன், கதிர், லோகநாதன் மற்றும் ரமேஷ் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென காவல்துறை ஆணையாளரருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப். 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:கும்பகோணத்தில் நிரந்தர தீயணைப்பு, மீட்புத்துறை கட்டடம் கட்டக் கோரி வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details