மதுரை: மேலூர் வட்டத்தில் உள்ள சேக்கிப்பட்டி, அய்யாபட்டி மற்றும் திருச்சுனை ஆகிய கிராமங்களில் உள்ள மலைகளை கிரானைட் குவாரிகளுக்காக 20 ஆண்டு குத்தகைக்கு ஒப்பந்தப்புள்ளிகள் அடிப்படையில் விண்ணப்பிக்க மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பிற்கு மதுரையில் பல்வேறு பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கிரானைட் குவாரிகளுக்கான ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, சேக்கிப்பட்டி கிராம மக்கள் கடந்த திங்கள்கிழமை (அக் 23) மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சேக்கிப்பட்டி கிராமத்திலுள்ள முத்தாலம்மன் கோவில் அருகே தொடர் காத்திருப்புப் போராட்டத்தை அக்டோபர் 26-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளனர். நாள்தோறும் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த பிறகு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சேக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறுகையில், "எங்கள் ஊரிலுள்ள பனிமலைக்குற்றைத்தான் மாவட்ட நிர்வாகம் கிரானைட் குவாரிக்காக ஒப்பந்தம் அறிவிக்க உள்ளது. இந்த மலையை இரண்டு பகுதியாகப் பிரித்து 17 ஏக்கரை 20 ஆண்டு குத்தகைக்கு விட முடிவெடுத்துள்ளது.
அக்டோபர் 31-ஆம் தேதி பொது ஏலம் நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட மலையைச் சுற்றி ஐந்து நீர்நிலைகள் உள்ளன. இதில் இரண்டு குடிநீருக்கானது. ஏலம் விடப்படுமானால் இப்பகுதி விவசாயம், குடிநீராதாரம் பாதிக்கப்படும். பெரியாறு உள்ளிட்ட எந்தவித கால்வாய்ப் பாசனமும் இல்லாத இந்தப் பகுதியில், குறிப்பிட்ட நீர்நிலைகள்தான் ஒரே ஆதாரம். இந்தப் பகுதி மக்களுக்கு இவைதான் ஒரே வாழ்வாதாரம். தாசில்தார், டிஎஸ்பி ஆகியோர் வந்து எங்களிடம் பேசி உறுதியளித்து, கலைந்து போகச் சொல்லி அறிவுறுத்தினர். ஆனால், எங்கள் கிராமத்துப் பெண்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்யும்வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூறிவிட்டனர். ஆகையால் போராட்டம் தொடரும்" என்றார்.
உள்ளூர் விவசாயி சாகுல் ஹமீது கூறுகையில், "எந்தவித நடைமுறைகளையும் பின்பற்றாமல் குவாரி ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னர் குவாரியாக இந்த மலை இல்லாதபோது, தற்போது புதிதாகச் சேர்த்துள்ளார்கள். இந்தக் குவாரி செயல்பாட்டு வந்தால் எங்கள் கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, சேக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்து மக்கள் வழிபடும் முருகன் கோவில் அந்த மலையில்தான் அமைந்துள்ளது. பழனி, திருப்பரங்குன்றம், விராலிமலை, சுவாமிமலைகளையெல்லாம் குவாரிக்காக இவர்கள் கைவைப்பார்களா..? கிராம மக்கள் 400 ஆண்டு காலமாக அமைதியாக வழிபடும் எங்களது முருகன் கோவிலை மட்டும் குவாரியாக்குவதை ஏற்க முடியாது" என்றார்.