தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 5, 2020, 3:35 PM IST

ETV Bharat / state

மதுரையில் கரோனா தொற்று படிப்படியாக குறைவு: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை: கரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு
அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு

மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (ஆகஸ்ட் 6) நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை பார்வையிட அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 5) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். பின்னர் அமைச்சர்கள் மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசும்போது, "மதுரையில் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதன்முறையாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஜூன் மாதத்தில் வேகமாக அதிகரித்து, உச்சத்தை அடைந்தது. தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கரோனா தொற்று குறையத் தொடங்கினாலும் அதற்கான பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை.

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை (ஆகஸ்ட் 6) மதுரை வருகிறார். முன்னதாக, திண்டுக்கல்லில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். மதுரையில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் விவசாயத் துறையினர், தொழில் துறையினர் பங்கேற்க உள்ளனர்" என்றார்.

அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு

அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "முதலமைச்சரின் வருகை காரணமாக கரோனா வைரஸ் படிப்படியாக குறைந்துள்ளது. அனைத்து மாநில முதலமைச்சருக்கும் முன்னோடியாக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார். 21.56 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறைவு பெற்ற திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். 326.10 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பில் இருந்து 1,254 கோடி ரூபாய் மதிப்பில், மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் மதுரையில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது" எனத் தெரிவித்தார்.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தமிழ்நாட்டில் நீரால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் கட்டுக்குள் உள்ளன. கரோனாவைக் குறைக்க பொதுமக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமே அதிக அளவில் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கரோனா அல்லாத பிற நோய்களுக்கு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ஆளுநர் பன்வாரிலால் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details