தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறு குறு தொழில்களின் இன்னல்கள்: சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

கரோனா தொற்று காலத்தில் சிறு குறு தொழில்களில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நாராயண ரானே விளக்கமளித்துள்ளார்.

By

Published : Jul 23, 2021, 11:37 AM IST

சு.வெங்கடேசன் எம்.பி
சு.வெங்கடேசன் எம்.பி

கரோனா பெருந்தொற்று காலத்தில் சிறு குறு தொழில்கள் செய்து வருபர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நாராயண ரானே பதில் அளித்தார்.

இது குறித்து சு. வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறு குறு தொழில்கள் கரோனா காலத்தில் எதிர் கொள்ளும் இன்னல்கள், அரசின் மீட்பு திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய சிறு குறு தொழில்கள் அமைச்சர் நாராயண ரானே அளித்துள்ள பதில்கள் சிறு குறு தொழில்கள் சந்திக்கிற பிரச்னைகளை விவரிக்கின்றன.

திட்டங்களின் பலன் என்ன?

‘இந்திய தொழிலகங்களின் ஒருங்கிணைவு' (Consortium of Indian Associations) 81ஆயிரம் தொழிலகங்களில் நடத்திய ஆய்வில் 88 விழுக்காடு சுய தொழில், சிறு குறு தொழில்களுக்கு ஒன்றிய அரசு அறிவித்த மூன்று மீட்பு திட்டங்களின் பயன்கள் சென்றடையவில்லை என்று முடிவுகள் வெளியாகின.

இது போன்ற ஆய்வை அரசு செய்துள்ளதா? செய்திருந்தால் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன? என்ற கேள்விகளை சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஒன்றிய சிறு குறு தொழில்கள் அமைச்சர் நாராயண ரானே, மீட்புத் திட்டங்கள் மீது எந்த ஒரு ஆய்வும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஐந்து முக்கிய பிரச்சினைகள்

ஆனால் தேசிய சிறு தொழில் கழகம், காதி, கிராமத் தொழில் ஆணையம் ஆகிய அமைப்புகள் பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிறுவனங்கள் எவ்வாறு பேரிடர் காலத்தில் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன என்பதை ஆய்வு செய்து கொடுத்துள்ள தகவல்களை அளித்துள்ளார்.

91 விழுக்காடு செயல்பட்டு வரும் நிறுவனங்கள், ஐந்து முக்கிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. 55 விழுக்காடு நிதி நீர்மம், 17 விழுக்காடு புதிய ஆர்டர்கள், 9 விழுக்காடு தொழிலாளர்கள் பிரச்சினை, 8 விழுக்காடு கச்சா பொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்தித்து வருவதாக தேசிய சிறு தொழில் கழக ஆய்வு தெரிவித்துள்ளது.

88 விழுக்காடு பாதிப்பு

காதி, கிராமத் தொழில் ஆணைய ஆய்வு முடிவுகளின்படி 88 விழுக்காடு பயனாளிகள் கரோனா காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 விழுக்காடு பயன் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

காதி, கிராமத் தொழில் ஆணைய ஆய்வு முடிவுகளின்படி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் 88 விழுக்காடு நிறுவனங்களில் 57 விழுக்காடு நிறுவனங்கள் பேரிடர் காலத்தில் தொழில்களை சில காலம் மூட வேண்டிய சூழ்நிலை வந்தது. இதனால், 30 விழுக்காடு நிறுவனங்கள் உற்பத்தி, வருவாய் சரிவை சந்தித்ததாக தெரிவித்துள்ளன.

பயன் பெற்றோம் எனக் கூறும் 12 விழுக்காடு நிறுவனங்களில் 65 விழுக்காடு தாங்கள் சுகாதார துறை, சில்லறை வியாபாரம் சார்ந்தவை எனத் தெரிவித்துள்ளன.

சம்பளம் கிடைத்ததா?

47 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே சம்பளத்தை முழுமையாக கொடுத்தவர்கள். 42 விழுக்காடு நிறுவனங்கள் சம்பளத்தை பகுதியாக கொடுத்தவர்கள். 11 விழுக்காடு சம்பளமே தராதவர்கள் என்பதும் இந்த ஆய்வு தெரியவந்தது.

பெரும்பாலான பயனாளிகள் கூடுதல் நிதி உதவி தேவை என்றும், வட்டி தள்ளுபடி தேவை எனவும், சந்தைப்படுத்த அரசின் ஆதரவு தேவை என தெரிவித்துள்ளனர்.

"அமைச்சர் தெரிவித்துள்ள இரண்டு ஆய்வுகளுமே சுய தொழில், சிறு குறு தொழில் நிறுவனங்கள் படும்பாடுகளை விவரிக்கிறது. ஆனால் மீட்புத் திட்டங்களின் தாக்கம் பற்றி எந்த ஆய்வும் அரசின் தரப்பில் செய்யப்படவில்லை என்று அமைச்சர் கூறியிருப்பது வருத்தம் அளிக்கிறது.

அரசின் திட்டங்கள் செயலாக்கம் குறித்த ஆய்வுகள் இல்லாவிடில் எப்படி உரிய வகையில் பயன்கள் போய்ச் சேரும். அரசு உடனே சிறு குறு தொழில்களைப் பாதுகாக்க தலையிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:தொழில் போட்டியால் நேர்ந்த விபரீதம்!

ABOUT THE AUTHOR

...view details