மதுரை: உலக தமிழ் சங்கத்தில் வேளாண்மைத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி, உணவு பதப்படுத்துல் தொழில்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்த மண்டல அளவிலான கூட்டம் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி பேசுகையில், "மதுரை மாவட்டத்தில் கூடுதல் மழை பெய்த காரணத்தால் விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. பெரியாறு, வைகை அணையிலிருந்து நீர் வருவதால் மதுரை மாவட்டத்தில் கூடுதல் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஏழைகள் உணவாக இருந்த சிறுதானிய உணவு வகைகள் தற்போது வசதியான மக்கள் சாப்பிடும் நிலை உருவாகியுள்ளது. எனில் அந்த பொருள்களுக்கு உள்ள மதிப்பு அதிகரித்து உள்ளது என்றுதான் பொருள்.
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை 2006ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், 2011ஆம் ஆண்டு வரை சிறப்பாக இயங்கி வந்தது. கடந்த ஆட்சியாளர்களின் தவறான செயல்பாடுகள் காரணமாக ஆலை இயங்காமல் உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வேறு வேறு தொழில்கள் செய்பவர்கள் கூட வேளாண்துறைக்கு வந்து விடுவார்கள்" என்றார்.
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், "மக்கள் உயிர் வாழ்வதற்கு விவசாயம் மிக முக்கிய ஆதாரமாக உள்ளது. கரோனா காலகட்டத்திலும் தங்களின் உயிரை துச்சமென நினைத்து விவசாயப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். கரோனா காலகட்டத்தில் விவசாயப் பணிகள் நடைபெறாமல் இருந்தால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கும், வேளாண்மைத்துறைக்கு தனி பட்ஜெட் போடப்பட்டதால் கூடுதல் நிதி கிடைத்துள்ளது.