தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறையில் கைதி இறந்த விவகாரம்: சட்ட ஒழுங்கு பிரச்னை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாளையங்கோட்டை சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு கைதி முத்து மனோ இறந்த விவகாரம் குறித்த வழக்கில், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தொடர்பாக திருநெல்வேலி காவல் ஆணையர், கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

By

Published : Jun 29, 2021, 8:46 PM IST

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

மதுரை:திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளத்தைச் சேர்ந்தவர் பாவநாசம். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், எனது மகன் முத்து மனோ, கொலை மிரட்டல் வழக்கு ஒன்றில் களக்காடு காவல்துறையினரால், கைது செய்யப்பட்டு திருவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் திடீரென அவர், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த ஏப்.,22ஆம் தேதி என் மகன் சக கைதிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை குறித்து நீதி துறை விசாரணை நடத்தவும், ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும், சிறைத் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், ரூ 2 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.

இந்த மனுவினை ஏற்கனவே விசாரணை செய்த உயர் நீதிமன்றம், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. அத்துடன், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சிறை காவலர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இறந்து போன முத்து மனோவின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று(ஜூன் 29) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 'உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் முத்து மனோவின் உடல் இதுவரை வாங்கப்படவில்லை. நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இந்த விவகாரம் சம்பந்தமாக போராட்டம் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வில்லை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது' என தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திருநெல்வேலி மாவட்ட காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளைக்கு (ஜூன் 30) ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:அரசு துறைகளின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது - நீதிபதிகள் கருத்து!

ABOUT THE AUTHOR

...view details