தமிழ்நாடு

tamil nadu

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு

By

Published : Mar 2, 2022, 10:37 AM IST

நீதிமன்றம் தகுதி அடிப்படையில் விசாரிக்காமல் மனுவை பரிசீலிக்குமாறு பொதுவாகப் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்வதை ஊக்குவிக்க முடியாது என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
உயர் நீதிமன்றம் மதுரை கிளை

மதுரை:சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரைச் சேர்ந்த ராதிகா என்பவர் தனது கல்வித் தகுதி சான்றிதழ் தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, அவரது மனுவைப் பரிசீலிக்க அலுவலருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவை நிறைவேற்றாத ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், மதுரை முதன்மை கல்வி அலுவலர், தமிழ்நாடு உயர் கல்வி கவுன்சில் உறுப்பினர் செயலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் ராதிகா மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுதாரரின் மனுவைப் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்பு தனக்கான உரிமையை நிலை நாட்ட வேண்டும். அதன் பிறகே மனுவை அலுவலர்கள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க முடியும். அந்த உரிமையை நிலை நாட்டாமல் தனக்குச் சாதகமாக மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என மனுதாரர் கேட்க முடியாது என்றார்.

மேலும், அலுவலர்களுக்கு விதவிதமாக மனு அனுப்புகிறார்கள். உரிய மனுக்களை அலுவலர்கள் சட்டப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. தேவையான ஆவணங்கள் இல்லாத நிலையில் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அலுவலர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது.

விரைவு தபாலில் மனுவை அனுப்பி விட்டு உடனடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மனுவைப் பரிசீலிக்குமாறு உத்தரவு பெறுகின்றனர். அனைத்து மனுக்களையும் அலுவலர்களால் விரைவில் முடிவெடுக்க முடியாது. அப்போது புதிய காரணங்களைக் கூறி மீண்டும் மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.

நீதிமன்றம் தகுதி அடிப்படையில் விசாரிக்காமல் மனுவை பரிசீலிக்குமாறு பொதுவாகப் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்வதை ஊக்குவிக்க முடியாது. தகுதி அடிப்படையில் விசாரணை நடத்திக் குறிப்பிட்ட உத்தரவு வழங்கப்பட்டிருந்தால் உத்தரவிடப்பட்ட அலுவலருக்கு எதிராக மட்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்.

மனு பரிசீலனை உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை, நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்வதற்கான உரிமையாக மனுதாரர்கள் கருதக்கூடாது. எந்த அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோ அந்த அலுவலரை மட்டும் நீதிமன்ற அவமதிப்பு மனுவில் சேர்க்க வேண்டும். இதனால் மனு பரிசீலனை உத்தரவு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை உயர் நீதிமன்ற பதிவுத்துறை ஊக்குவிக்க வேண்டியதில்லை. மனுதாரர் கோரிக்கை நிராகரிக்கப் படுகிறது" என்றார். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டாலினின் நல்லாட்சிக்கு அடித்தளம் அண்ணாவின் கனிவே, கலைஞரின் துணிவே: திமுக சிறப்புப் பட்டிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details