தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலிச் சான்றிதழ்: மேலும் ஒருவரை பணியிடை நீக்கம் செய்த மீனாட்சி கோயில் நிர்வாகம்

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் போலியாக கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த மேலும் ஒரு ஊழியரை, கோயில் நிர்வாகத்தினர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

By

Published : Dec 11, 2020, 1:17 PM IST

போலிச் சான்றிதழ்
போலிச் சான்றிதழ்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் கல்விச் சான்றிதழ்களை போலியாக கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் காமாட்சி என்ற ஊழியர் போலிச் சான்றிதழ் கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோயிலில் பணிபுரியும் ஊழியர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் உண்மையானவையா? என்று சரிபார்ப்பதற்காக அவரவர் பயின்ற கல்வி நிலையங்களுக்கு அவை அனுப்பிவைக்கப்பட்டன. இதில் கோயிலில் சேவகராகப் பணிபுரியும் சத்தியமூர்த்தி என்ற ஊழியரின் சான்றிதழ் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து அவர் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், கோயிலில் அர்ச்சகர்கள், ஊழியர்களின் செல்போன்கள் மாயமான சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கோயிலில் ஓதுவாராகப் பணிபுரியும் அம்ரீஷ் ராம் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அம்ரிஷ் ராமும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரின் கல்விச் சான்றிதழ்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அதனை அனுப்பி, ஊழியர்கள் சிலரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து அறிய பள்ளிகளில் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருப்பதி லட்டு டோர் டெலிவரி போலி விளம்பரம்: இணையதளம் மீது வழக்கு பதிவு

ABOUT THE AUTHOR

...view details