மதுரையில் மற்றுமொரு காவலர் துாக்கிட்டு தற்கொலை! - crime
மதுரை: மாநகர் சிறப்பு காவல்படையில் காவலராக பணியாற்றிவந்த ராமர் என்பவர் தனது வீட்டிற்குள் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாத்துார் கிராமத்தைச் சேர்ந்த ராமர் (32) என்பவர் மதுரை மாநகர் சிறப்பு காவல்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ராமர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று (பிப்.14) அவர் பணிக்கு வராததால் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தல்லாகுளம் காவல் துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவரும் காவல் துறையினர், ராமரின் தற்கொலைக்கு குடும்பப் பிரச்னை காரணமா? அல்லது பணிச்சுமை காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இதைப்போலவே, மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேரந்த ஒரு காவலர் காதல் பிரச்னை காரணமாக நேற்று(பிப்.13) தற்கொலை செய்துகொண்ட நிலையில், மேலும், ஒரு காவலர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.