மதுரை அனுப்பானடி சிந்தாமணி சாலையில் உள்ள மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் தங்கி, யாருடைய ஆதரவும் இல்லாமல் 60 வயதுடைய மூதாட்டி கருப்பாயி வாழ்ந்துவருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஆதரவற்ற நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மதுரைக்கு புலம்பெயர்ந்த கருப்பாயிக்கு இந்த கழிவறை வளாகமே அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.
இது குறித்து நமது செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில், திருப்புவனம் பக்கத்தில் இருக்கிற பனையூர் ரெட்ட குளம்தான் எனது சொந்த ஊர். அங்கேயே பிறந்து வளர்ந்து என் உறவினர் ஒருவரையே திருமணம் முடித்து வாழ்ந்துவந்தேன். என் கணவர் இறந்த பிறகு மதுரைக்கு வந்தேன். அவரை இழந்த பிறகு வாடகை கொடுக்க வழியில்லாத நிலையில் இந்தக் கழிப்பறை கட்டடத்திற்குள் குடிபுகுந்தேன்.
இந்தக் கழிப்பறையை பயன்படுத்த வருபவர்களிடமிருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் பெற்று அந்த வருமானத்தில் எனது வாழ்க்கை ஓடுகிறது. நாள் ஒன்றுக்கு 50லிருந்து 70 ரூபாய்வரை எனக்குக் கிடைக்கும். இதில் வரும் தொகையிலிருந்து மின்சாரக் கட்டணம் செலுத்தி, இந்தக் கழிப்பறை வளாகத்தை சுத்தம் செய்து பராமரித்துவருகிறேன்.