தமிழ்நாடு

tamil nadu

ஆயுதபூஜை எதிரொலி; மதுரையில் கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை விலை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 12:04 PM IST

Jasmine Price in Madurai: ஆயுதபூஜையை முன்னிட்டு மதுரை மல்லிகை பூவின் விலை கிலோ ரூபாய் 1,200 வரை உயர்ந்துள்ளது.

மதுரை மல்லிகை பூவின் விலை கிலோ ரூபாய் 1,200க்கு உயர்ந்துள்ளது
ஆயுதபூஜை எதிரொலி

மதுரை:நவராத்திரியின் முக்கிய நாட்களான ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, மதுரை மல்லிகை கிலோ ரூ.1,200க்கு விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது, மலர் வணிக வளாகம். இங்கு வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, நெடுங்குளம், காரியாபட்டி, மேலூர், கொட்டாம்பட்டி, சத்திரப்பட்டி, ஊமச்சிகுளம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் விளையும் பூக்கள், மதுரை மலர் வணிக வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், மதுரை மாவட்டம் மட்டுமன்றி, அண்டை மாவட்டங்களான விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளிலிருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 டன்னுக்கும் மேலாக பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, மதுரையைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் விளையும் மல்லிகைக்கு தனிச்சிறப்பு உண்டு என்பதால், 2013ஆம் ஆண்டு மத்திய அரசு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கியுள்ளது.

மேலும், மதுரை மல்லிகையின் தனிப்பட்ட மணம், தரம் காரணமாக வெளி மாநிலங்களுக்கு மட்டுமன்றி சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி துவங்கிய நவராத்திரி விழாவை முன்னிட்டு, பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, மதுரை மல்லிகை கிலோ ரூ.1,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரை மலர் வணிக வளாகத்தில் இன்று விற்பனையாகும் பிற பூக்களான முல்லை ரூ.800, பிச்சி ரூ.800, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.600, வெள்ளை அரளி ரூ.700, செவ்வந்தி ரூ.250, செண்டு மல்லி ரூ.100, கனகாம்பரம் ரூ.800, வாடாமல்லி ரூ.80, தாமரை (ஒன்றுக்கு) ரூ.35, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.300 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரை மல்லியில் விலை குறித்து, மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், “அதிக பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பருவநிலை தொடருமானால், பூக்களின் விலையில் மாற்றமின்றித் தொடரும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னை புறநகரில் அக்டோபர் 24ஆம் தேதி மின்சார ரயில் சேவைகள் ரத்து! கண்டிப்பா படிங்க! அப்புறம் கஷ்டப்படாதிங்க!

ABOUT THE AUTHOR

...view details