தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 2, 2020, 5:07 PM IST

ETV Bharat / state

'ஒருவரை வைத்து மொத்த காவல்துறையையும் தவறாக எடை போடக் கூடாது' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: காவல்துறையில் ஒரு சிலரை வைத்து மொத்த காவல்துறையினரையும் தவறாக எடை போடக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai high court
madurai high court

சாத்தான்குளம் தந்தை மகன் இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அதனடிப்படையில், இவ்வழக்கு சிபிஐக்கு மாறும் வரை தற்காலிகமாக சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்கும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, இன்று (ஜூலை 2) உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மற்றும் மனநல நிபுணர்கள் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகினர்.

கூடுதல் காவல்துறை தலைவர் தாமரைக்கண்ணன் காணொலி வழியாக ஆஜராகி, "காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாவட்ட அளவில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொருவரின் தனிப்பட்ட மன அழுத்த அளவும் கண்காணிக்கப்படுகிறது. சிபிசிஐடி தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையம், அரசு மருத்துவமனை, கிளைச்சிறை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடைபெற்றது. தலைமைக் காவலர் ரேவதி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் தலைமை காவலர்கள் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். பாலகிருஷ்ணன், ஸ்ரீதர், முருகன் ஆகியோரை கோவில்பட்டி நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் சேகர் கூறியதாவது, "கரோனா தொற்றின் காரணமாக மக்கள் நல்வாழ்வுத் திட்டம் தடைபட்டுள்ளது. மீதமுள்ள 26,000 காவல்துறையினர் விரைவில் பாதுகாப்புக்கு உட்படுத்தப்படுவார்கள். டிஜிபி மட்டத்திலிருந்து காவலர் வரை பயிற்சி அளிக்கப்படுவார்கள். தற்போது வரை தமிழ்நாட்டில் இருந்து 254 காவல்துறையினர் மட்டுமே மாஸ்டர் பயிற்சியாளர்களாக பயிற்சி பெற்றுள்ளனர். இந்த எண்ணை இரட்டிப்பாக்க வேண்டும்.

வெவ்வேறு அறிவியல் சோதனை முடிவுகளின் அடிப்படையில் காவல்துறையினரின் மன அழுத்தம் கணிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் காவல் துறையினர் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்தமாக 10.6 விழுக்காட்டினர் பொதுவான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று விழுக்காடு பேர் தீவிர மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: சாத்தான்குளம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி அளித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு நீதி நிலை நாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடியின் நடவடிக்கைகள் உள்ளன. எதற்காக ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அடிக்கின்றார். வளர்ச்சியான சமூகத்தில் வந்த பின்பாக ஒரு மனிதம் மீதான தாக்குதலுக்கு காரணம் ஏற்கனவே மனதில் கோபம் இருந்திருக்கும் அந்த கோபம் அதிகரித்து தான் இது போன்ற நிலை ஏற்பட்டிருக்கும்.

எனவே, அவருக்கு ஏதோ பிரச்னை இருந்திருக்கும் அதனை கண்டுபிடிக்க வேண்டும். பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு வர அச்சம் அடையும் நிலைதான் உள்ளது. காவல்துறையில் ஒரு சிலரை வைத்து காவல்துறையினரை எடை போடக் கூடாது. 24 மணி நேரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என பொதுமக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். இதேபோல் அனைத்து வழக்குகளிலும் செயல்பட வேண்டும்.

சாத்தான்குளம் விவகாரம் போன்று இனி எந்த சம்பவமும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து வழக்கு சம்பந்தமாக ரிமாண்ட் மற்றும் பலவற்றிற்கான அதிகாரங்களைக் கையாள்வதற்கு சிஜேஎம் -க்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அரசு தடயவியல் பரிசோதனைகளையும் செய்யலாம். மாஸ்டர் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:தடுப்பூசியால் உயிரிழப்பா? மூன்று மாத குழந்தையின் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

ABOUT THE AUTHOR

...view details