மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்திற்கு கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வாக்கு சேகரிக்க வந்த போது ஏற்பட்ட வன்முறையால் சேதமடைந்த பொருட்களுக்கு வாகனங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி கீழமை நீதிமன்றத்தில் உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2014ல் நடைபெற்ற எம்.பி. தேர்தலில் பாஜக வேட்பாளராக கருப்பு முருகானந்தம் போட்டியிட்டார். அவர் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் மல்லிப்பட்டினத்திற்கு பிரசாரத்துக்கு சென்ற போது வன்முறை நிகழ்ந்தது. இதில் சேதமடைந்த இயந்திர படகுகள், வாகனங்களுக்கு இழப்பீடு மற்றும் நீதி விசாரணை கோரி ஹபீப்முகமது என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேல் எம்எல்ஏவாக வருவார். அவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார். அவரை தேர்தலில் வீழ்த்த எதிர்தரப்பினர் வித்தியாசமான திட்டத்தை செயல்படத்துவர்.
வடிவேலுவால் பிரசாரத்துக்கு செல்ல முடியாது. அவர் கிராமங்களுக்கு பிரசாரத்துக்கு செல்ல முடியாமல் தடுக்கப்படுவார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு தொழில்நுட்பம் கைகொடுக்கும். சமூக வலை தளங்கள் வழியாக அவர் வாக்காளர்களை சென்றடைவார். அதே போன்ற சூழ்நிலையை 2014 மக்களவை தேர்தலில் கருப்பு முருகானந்தம் சந்தித்துள்ளார்.
அவர் 14.4.2014ல் மல்லிப்பட்டினம் கிராமத்துக்கு பிரசாரத்துக்கு சென்றபோது கிராமத்துக்கு வெளியே ரகுமான்கான் என்பவர் தலைமையில் இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். தேர்தலில் வாக்களிப்பது சட்டப்படியான உரிமை. வாக்கு கேட்பது அடிப்படை உரிமை.