தமிழ்நாடு

tamil nadu

சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் - மதுரை கோட்ட மேலாளர் தகவல்

By

Published : Aug 4, 2023, 11:04 PM IST

சென்னை திருநெல்வேலி இடையே வந்தேபாரத் ரயில் இயக்க தயார் நிலையில் இருக்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளதாகவும், மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மறு சீரமைப்புப் பணிகளை பிரதமர் தொடங்கி வைப்பதாகவும், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

மதுரை கோட்ட மேலாளரின் தகவல்

மதுரை:இந்தியா முழுவதும் 1309 ரயில் நிலையங்கள் 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில் மறு வடிவமைப்புச் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில், முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்புச் செய்யும் பணிகளுக்கான அடிக்கல்லை ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 11 மணியளவில் காணொலிக்காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார்.

ரயில் நிலையங்கள் உள்ள நகரின் இருபுறமும் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த நிலையங்களை நகர் மையங்களாக மேம்படுத்துவதற்கான பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் ரயில் நிலையத்தை மையமாகக் கொண்ட நகரத்தின் ஒட்டு மொத்த நகர்ப்புற வளர்ச்சி சாத்தியமாகும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55, பீகாரில் 49, மகராட்டிரம் 44, அஸ்ஸாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13 ரயில் நிலையங்கள் முதல்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டு மறுசீரமைப்புச் செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை விளக்குவதற்காக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியா முழுவதும், தென்காசி மற்றும் விருதுநகர் உள்பட 508 ரயில் நிலையங்கள் மறு சீரமைப்புப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி 6ஆம் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதில் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 15 நிலையங்களில் அம்ருத் திட்டத்தின் மூலம் பணிகள் நடைபெற உள்ளன" என்று தெரிவித்தார்.

பயணிகளின் வசதிக்காக நடைமேடை மேம்பாடு, மின்தூக்கி, காத்திருப்பு அறைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகாவும். ஏற்கனவே துவங்கி வைக்கப்பட்ட மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து முனைப்புடன் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "மேலும் திருநெல்வேலி - சென்னை இடையேயான 650 கி.மீ.க்கு வந்தே பாரத் ரயில் இயக்க போதுமான வசதிகளை ஏற்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்காக தயார் நிலையில் இருக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பகல் நேர ரயிலாகவே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பாம்பன் ரயில் பாலப்பணிகள் தெற்கு ரயில்வே சார்பில் மிக விரைவாக நடைபெற்று வருவதாகும் கூறினார். மேலும், இத்திட்டத்தின் முதல் பகுதியாக, மதுரை கோட்டத்தின் பின்வரும் பழனி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், விருதுநகர், புனலூர், சோழவந்தான், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராஜபாளையம், பரமக்குடி உள்ளிட்ட 15 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன எனக் கூறினார்.

"நீண்ட கால அணுகுமுறையுடன், தொடர்ச்சியான அடிப்படையில் ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், நிலையங்களில் உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக, மாஸ்டர் பிளான்களைத் தயாரித்தல் மற்றும் அவற்றை படிப்படியாக செயல்படுத்துதல்,
நிலையத்தின் அணுகு பகுதி, சுற்று பகுதிகள், காத்திருப்பு கூடங்கள், கழிப்பறைகள், தேவையான லிஃப்ட் / எஸ்கலேட்டர்கள், தூய்மை, இலவச இணைய வசதி, பயணிகள் தகவல் அமைப்புகள், எக்சிகியூடிவ் ஓய்வறைகள், வணிக கூட்டங்களுக்கான அரங்குகள், பூங்காக்கள், நிலைய கட்டிடத்தை மறுவடிமைப்பு செய்து மேம்படுத்துதல், நகரின் இருபுறமும் நிலையத்தை ஒருங்கிணைத்தல், பன்முக ஒருங்கிணைப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், சுற்றுச்சூழலுக்கு ஏதுவான அமைப்புகள், ஜல்லிக்கற்கள் இல்லாத நடைமேடை, தேவை மற்றும் சாத்தியக்கூறுகளின்படி ‘ரூப் டாப் பிளாசாக்கள்’ மற்றும் சிட்டி சென்டர்களை உருவாக்குதல் ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்" என்று தெரிவித்தார்.

மேலும் பேட்டியின் போது கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் டி. ரமேஷ் பாபு, முதன்மை திட்ட மேலாளர் (கதி சக்தி) எம். அய்யப்ப நாகராஜா, மூத்த கோட்ட வணிக மேலாளர் ஆர்.பி. ரதி பிரியா, மூத்த கோட்ட பொறியாளர் ஆர். நாராயணன், மூத்த கோட்ட இயக்க மேலாளர் வி. பிரசன்னா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:தமிழக அரசு ஒட்டு மொத்த விவசாயிகளுக்கும் எதிராக உள்ளது - பி.ஆர்.பாண்டியன்

ABOUT THE AUTHOR

...view details