தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கலெக்டர் அலுவலகம் எப்படி இருக்கும்...’ கேள்வி எழுப்பிய சிறுமி, விருப்பத்தை நிறைவேற்றிய மதுரை ஆட்சியர்! - Madurai collector fulfill wish of a girl who lost her father in covid 19

மதுரை: கரோனா பெருந்தொற்றால் தந்தையை இழந்த சிறுமியின் சிறு ஆசையை, மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனீஷ் சேகர் உடனடியாக நிறைவேற்றி சிறுமியையும், அவரது தாயையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

கரோனாவால் தந்தையை இழந்த குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய மதுரை ஆட்சியர்
கரோனாவால் தந்தையை இழந்த குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய மதுரை ஆட்சியர்

By

Published : Jun 24, 2021, 2:43 PM IST

மதுரை, தபால் தந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சோனா தீபன். இவரது கணவர் தனுஷ் தீபன். பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 17ஆம் நாள் கரோனா தொற்றின் காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஆட்சியர் அலுவலகம் வந்த சிறுமி

இந்நிலையில் கரோனாவால் தாய், தந்தையர் உயிரிழந்தால் அக்குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கப்படும் நிதி உதவியைப் பெறுவதற்கு மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் விண்ணப்பிக்க சோனா தீபன், தனது ஒன்பது வயது மகள் டீடா தீபனுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார். இவரது விண்ணப்பத்தை மாவட்டக் குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் பாண்டியராஜா, சண்முகம் இருவரும் சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

தந்தையுடன் சிறுமி டீடா

அப்போது, டீடா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வியந்து பார்த்துக் கொண்டிருந்துள்ளார். தொடர்ந்து, தனது தாயார் சோனாவிடம் ”ஆட்சியர் அலுவலகம் எப்படி இருக்கும்? ஆட்சியரின் பணிகள் எவ்வாறு இருக்கும்?” என கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்துள்ளார்.

சிறுமியை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆட்சியர்

இதனை அங்கு கேட்டுக் கொண்டிருந்த குழந்தைகள் நலக்குழு அலுவலர் பாண்டியராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றக் கோரி வேண்டுகோள் வைத்தார். தொடர்ந்து இந்தத் தகவல் ஆட்சியர் டாக்டர் அனீஷ் சேகருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அக்குழந்தையை அழைத்துக் கொண்டு அவரது அறைக்கு வருமாறு ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டார்.

கரோனாவால் தந்தையை இழந்த குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய மதுரை ஆட்சியர்

இதனையடுத்து ஆட்சியர் அறைக்கு வந்த குழந்தை டீடா, மகிழ்ச்சியுடன் அந்த அறையைப் பார்த்து மகிழ்ந்தார். மாவட்ட ஆட்சியரும் குழந்தை டீடாவுக்கு அவரது பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

’வருங்காலத்தில் படித்து ஐஏஎஸ் ஆவேன்’

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து டீடா தொலைபேசி வாயிலாக நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசுகையில், ”என்னுடைய அப்பாவுக்கு நான் ஆட்சியராக வரவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆகையால் அதுகுறித்து அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். இன்று முதல்முறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த போது எனக்கு வியப்பாக இருந்தது.

வருங்காலத்தில் நானும் ஐஏஎஸ் படித்து ஆட்சிப் பணியில் அமர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் என்னிடம் மிகுந்த அன்புடன் பேசினார்” என்றார்.

டீடா மதுரையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தற்போது மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது அக்கா தியா தீபன் டோக் பெருமாட்டி கல்லூரியில் படித்து வருகிறார்.

இதையும் படிங்க:அறவழியில் போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் வாபஸ் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details