மதுரை:சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவோருக்கு குடியரசுத் தலைவரின் சுதந்திர தினப் பதக்கம் வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான குடியரசுத் தலைவரின் சுதந்திர தினப் பதக்கம் மதுரை மத்திய சிறையில் பணியாற்றி வரும் உதவி சிறை அலுவலர்களான ஜவகர் மற்றும் முனிராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சரால் பொங்கல் பண்டிகையை ஒட்டி ‘பொங்கல் பதக்கம்’ வழங்கப்படும். இந்த பதக்கம், மதுரை மத்திய சிறை மற்றும் அதன் கிளை சிறைகளில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர்கள் ஒன்பது பேருக்கும் வழங்கப்பட்டது.
இதனை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் பழனி தலைமையில், சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வசந்த கண்ணன் முன்னிலையில் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.