தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 6:37 PM IST

ETV Bharat / state

வீட்டை அடமானம் வைத்து நியோமேக்ஸில் முதலீடு; ஒரே வழக்காக பட்டியலிட நீதிமன்றம் உத்தரவு!

Neomax Financial Institution case: நியோமேக்ஸ் நிதி நிறுவனத்திலிருந்து ரூ.70 லட்சத்து 30 ஆயிரத்தை மீட்டுத் தரக்கோரி காரைக்குடியைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் ADGP மற்றும் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

hc-madurai-branch-order-to-list-neomax-financial-institution-fraud-cases-together
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்குகளை ஒன்றாக இணைத்து பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

மதுரை:காரைக்குடியைச் சேர்ந்த ஜெயப்பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "காரைக்குடியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் சபரீஸ் என்பவர், தான் நியோமேக்ஸ் கம்பெனியில் டீம் லீடராக முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் எனக் கூறி, காரைக்குடியைச் சேர்ந்த நாகராஜ் அவரது மனைவி மஞ்சுளா அஞ்சல் துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற கார்த்திக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் கூட்டம் நடைபெறுவதாகக் கூறி, காரைக்குடி அருகில் உள்ள மிகப்பெரிய விடுதிக்கு அழைத்துச் சென்று நாகராஜ், நாகராஜ் மனைவி மஞ்சுளா, கார்த்திக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் என்னிடம் நியோமேக்ஸிலில் முதலீடு செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினர்.

தானும் அதனை நம்பி, கடந்த 2022ஆம் ஆண்டு எனது வீட்டை ரூபாய் 21 லட்சத்திற்கு அடகு வைத்து, ரூபாய் 12 லட்சத்தை நியோமேக்ஸ்-க்கு துணை நிறுவனமான ரோபெல்லோ ப்ராபடீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தேன். தொடர்ந்து, என்னிடம் என் நண்பர்களையும், உறவினர்களையும் முதலீடு செய்ய வைத்தால் அதிக லாபம் பணம் ஈட்டலாம் எனக் கூறியதை நம்பி, 17 பேரை முதலீடு செய்ய வைத்தேன். 17 பேரும் சுமார் ரூபாய் 70 லட்சம் வரை முதலீடு செய்தனர்.

இந்நிலையில், தான் நியோமோக்ஸ் நிறுவனம் மோசடி செய்ததாக வழக்குப் பதிந்த செய்தி தெரிய வந்தது. தொடர்ந்து, நாங்கள் பணத்தைத் திருப்பி கேட்டபோது நிறுவனத்தின் மீது எவ்வித புகாரும் கொடுக்க வேண்டாம் என்றும், புகார் கொடுத்தால் எவ்வித பணமும் திரும்பக் கிடைக்காது என்றும், விரைவில் பணத்தை திரும்பிச் செலுத்துவதாகவும் கூறினர்.

ஆனால், இன்று வரை எங்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. எங்களிடம் ரூபாய் 70 லட்சத்து 30 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, நிலத்தைப் பதிந்து தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து, பணத்தைத் திருப்பித் தராமலும், நிலத்தைப் பதிவு செய்து தராமலும் ஏமாற்றி, நம்பிக்கை மோசடி செய்த நியோமேகஸ் குழுமத்தின் இயக்குனர்கள் மற்றும் முகவர்களாகச் செயல்பட்ட நாகராஜ், அவரின் மனைவி மஞ்சுளா, கார்த்திக் மற்றும் அவரது மனைவி மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களின் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சக்தி சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி குறித்து நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து 18ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனவும், மேலும் மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் ADGP மற்றும் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஆக்கிரமிப்பு செய்ததா சிவகாசி மாநகராட்சி? ஆட்சியர், ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details