தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை ஆவின் பணி நியமன ஆணைகளை ரத்து செய்தது செல்லும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Madurai Aavin: அதிமுக ஆட்சி காலத்தில் மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நீக்கம் செல்லும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 10:57 PM IST

மதுரை ஆவின் பணி நியமன ஆணைகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மதுரை ஆவின் பணி நியமன ஆணைகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: விருதுநகர், மதுரை, திருச்சி ஆவினில் கடந்த அதிமுக ஆட்சியின் போது பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மதுரை, விருதுநகர் ஆவின் பணியாளர்கள் நியமனத்தை அரசு ரத்து செய்தது. இதையடுத்து தங்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து பணி நீக்க உத்தரவில் தலையிட மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தார்.
இதை ரத்து செய்யக்கோரி ஆவின் பணியாளர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவில், "மதுரை ஆவினில் 47 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆவின் பணிக்காக விண்ணப்பங்கள் பதிவு தபால் அல்லது விரைவு தபாலில் அனுப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் 33 பேரின் விண்ணப்பங்கள் பதிவு தபால் அல்லது விரைவு தபாலில் அனுப்பப்படவில்லை.
விண்ணப்பங்கள் பெறப்பட்டது. எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. விண்ணப்பங்கள் முறையாக, முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.

எழுத்துத்தேர்வு முடிந்ததும் தேர்வு முடிவுகளை குப்பை தொட்டியில் வீசிவிட்டு, நியமனம் செய்ய வேண்டியவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்றுக் கொண்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மதுரை ஆவினில் தேர்வு முறைகேடு மட்டுமில்லாமல் குற்ற சதி, ஆவணங்களை திருத்தியது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

இதனால் முறைகேடான நியமனங்களை ரத்து செய்து, அதற்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அலுவலர்களை சுதந்திரமாக நடமாடவிட்டால், இதுபோன்ற முறைகேடுகளை அவர்கள் தொடர்ந்து செய்வார்கள். மதுரை ஆவின் பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக, உத்தரவு நகல் கிடைத்த 48 மணி நேரத்தில் ஆவின் பொது மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.

காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். மதுரை ஆவின் பணி நியமனம் ரத்து உறுதி செய்யப்படுகிறது. விருதுநகர் ஆவினில் 66 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒருவரின் விண்ணப்பம் மட்டும் தபாலில் பெறவில்லை. தேர்வு முறையாக நடத்தப்பட்டுள்ளது. ஓ.எம்.ஆர்.சீட் உள்ளன. இதனால் விருதுநகர் ஆவின் பணியாளர் பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

அவர்களுக்கு, பணியில் இல்லாத நாட்களுக்கான ஊதியம் தவிர்த்து, பணித் தொடர்ச்சி மற்றும் பணப்பலன்கள் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். விண்ணப்பங்களை சரி பார்த்தல், மதிப்பெண் சரி பார்த்தல் மற்றும் முறைகேடு குறித்து புதிதாக விசாரிக்கலாம். குற்றவியல் புகாரும் அளிக்கலாம்.

பணி நியமனம் பெற்றவர்களின் தகுதி, சான்றிதழ், முன்நடத்தை குறித்து ஆய்வு நடத்தலாம். விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணையை தொடரலாம். திருச்சி ஆவினில் 43 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நியமனத்தை ரத்து செய்ய முடியாது. இதனால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்த்து பணித்தொடர்ச்சி மற்றும் பணப்பலன் வழங்க வேண்டும்.

இந்த நியமனத்தில் கல்வித்தகுதி, இன சுழற்சி பின்பற்றாதது குறித்து விசாரணை நடத்தலாம். திருச்சி ஆவினில் ஓ.எம்.ஆர்.சீட் எங்கிருக்கிறது என்பது இப்போது வரை மர்மமாக உள்ளது. தேர்வு மற்றும் ஓ.எம்.ஆர்.சீட் முறைகேடு குறித்து ஆவின் பொது மேலாளர், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஊழியர்களை அவமரியாதையாகப் பேசும் அலுவலர்கள்; நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் உண்ணாவிரதம்!

ABOUT THE AUTHOR

...view details