தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. ரெடியாகும் காளையர்கள்..! - Today January 15th Pongal festival

Avaniyapuram Jallikattu: புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 1000 காளைகள் 600 மாடுபிடி வீரர்களுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
Avaniyapuram Jallikattu news in Tamil

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 6:54 AM IST

Updated : Jan 15, 2024, 12:26 PM IST

மதுரை:'தை' முதல் நாள் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், பொங்கலுக்கே பெயர் போன மதுரை 'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு' மைதானம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தேர்வு செய்யப்பட்ட 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்களுடன் கோலாகலமாக இன்று (ஜன்.15) தொடங்குகிது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழியுடன் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கும். வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மேயர் இந்திராணி பொன் வசந்த் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.

'தைப்பொங்கல்' திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள மந்தையம்மன் கோயில் முன்பாக அமைக்கப்பட்ட வாடிவாசலில் நடைபெறுகிறது. இன்று காலை 8 மணியளவில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்கின்றனர். அதன் பிறகு, அவனியாபுரத்திலுள்ள மந்தையம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் காளைகள் அவிழ்த்து விடப்படும். பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் துவங்கும்.

8 சுற்றுகளாக நடக்கும் ஜல்லிக்கட்டு:இந்தப் போட்டி குறைந்தபட்சம் 8 சுற்றுகளாக மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் ஒவ்வொரு சுற்றிலும் 50-லிருந்து 75 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பர். ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றில் விளையாட அனுமதிக்கப்படுவர். இதுவரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் விளையாட 1000 காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் தேர்வாகியுள்ளனர்.

முதல் பரிசு 'கார்': இன்று அதிகாலை நடைபெறும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, தேர்வாகும் நபர்கள் மற்றும் காளைகளே களமிறங்கி விளையாட அனுமதிக்கப்படுவர். முதல் பரிசு பெறும் மாட்டின் உரிமையாளருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிக காளைகளைப் பிடித்து முதலிடம் பெறும் மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

பாதுகாப்பு பணிகள் தீவிரம்:காயமடையும் வீரர்கள் மற்றும் காளைகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை சார்பாக சிறப்பு முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

இதற்காக வாடிவாசல் அருகே இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை மாநகர காவல்துறை சார்பாக 800-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காளைகளின் திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும்:வாடிவாசல் அருகே களத்தில் வீரர்களும் காளைகளம் விளையாடுவதற்கு ஏதுவாக தேங்காய் நார்க் கழிவுகள் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ஒன்றரை அடிக்கு கொட்டப்பட்டுள்ளன. மாடுகளின் கொம்புகளைப் பிடிப்பதோ, அவற்றின் கால்களைப் பின்னுவதோ கூடாது எனவும் மாடுகளின் திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் உள்ளன. மேலும் காளை மூன்று சுற்றுகள் சுற்றும் வரை வீரர் இறுகப் பற்றியிருந்தாலோ அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பிடித்தவாறு சென்றாலோ மட்டுமே மாடுபிடி வீரர் வெற்றி பெற்றதாகக் கருதப்படுவார். ஒரே நேரத்தில் பலர் காளையைப் பிடிக்க முயல்வது கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எல்இடி திரைகளில் ஜல்லிக்கட்டு:அவனியாபுரம் பகுதியில் பொதுமக்களும் ஜல்லிக்கட்டு விளையாட்டைக் கண்டு ரசிக்கும் வகையில் மதுரை மாநகராட்சி சார்பாக ஆங்காங்கே பிரம்மாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்து செல்லும் காளைகளை, உரிமையாளர்கள் சேகரிக்கும் இடம் வரை சவுக்குக் கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: களைகட்டும் பொங்கல் பண்டிகை! தமிழர் வீரம் பேசும் ஜல்லிக்கட்டு! குதூகலம் அடையும் கொண்டாட்டங்கள்!

Last Updated : Jan 15, 2024, 12:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details