தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனைத்து ஒத்துழைப்பு வழங்கத் தயார் - நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்!

மதுரையில் அமையுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு, எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து நடக்கும் கூட்டத்தின் முடிவினை பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

By

Published : Jul 7, 2021, 10:54 PM IST

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "இந்தியாவில் 22 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2018ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக அமைய உள்ள 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. வெளிப்புற நோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளன.

எனவே, மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான "ப்ராஜெக்ட் செல்"லை உருவாக்கி, அதில் இயக்குனர், மருத்துவக் கண்காணிப்பாளர், இணை இயக்குனர், நிர்வாக அலுவலர் உள்பட பலரை நியமனம் செய்தும், தற்காலிக இடத்தை உருவாக்கி வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

தமிழ்நாடு அரசு பதில்

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசுத்தரப்பில், 'மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளோம். மேலும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை, ஜூலை 9ஆம் தேதி சந்திக்கவுள்ளார். அன்று மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்தும் பேசப்படும்.

16ஆம் தேதி கூட்டம்

மாணவர் சேர்க்கை மற்றும் தற்காலிக வெளிப்புற நோயாளிகள் பிரிவை உருவாக்குவதற்கான, மத்திய அரசின் பரிந்துரைகள் குறித்து முடிவெடுப்பதற்கான கூட்டம் ஜூலை 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்' எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கை, தற்காலிக வெளிப்புற நோயாளிகள் பிரிவை உருவாக்குவது குறித்து எடுக்கப்படும் முடிவை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

இதையும் படிங்க:கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உத்தரவு: ரத்து செய்ய கோரியவருக்கு அபராதம்

ABOUT THE AUTHOR

...view details